மழைபோல் விழுந்த பயணிகளின் உடல்கள்- உக்ரைனில் சுட்டுவீழ்த்தப்பட்ட மலேசிய விமான பயங்கரம்
கிவ்: உக்ரைனில் மலேசிய விமானம் ரஷ்ய கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தினால் சிதைந்த உடல்கள் மழைபோல் அங்குள்ள வீடுகளின் மேல் விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று முன்தினம் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைனின் கிழக்கு பகுதியில் சுட்டு வீழ்த்தப் பட்டது. அதில் விமானத்தில் பயணம் செய்த 295 பேரும் பலியாகினர்.
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபோது அங்கு இரவு நேரம் என்பதால் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். திடீரென்று கேட்ட இடிபோன்ற பலத்த சத்தத்தால் வெளியில் வந்து கண்டபோது விமான பயணிகளின் உடல்கள் வீட்டின் மேல் விழுந்ததைக் கண்டதும் மக்கள் அலறிவிட்டனர்.
வீடுகளில் இருந்து 330 அடி தூரத்தில் உள்ள கோதுமை வயலில் சுமார் 35 க்கும் மேற்பட்டோரின் உடல்கள் விழுந்து சிதறி கிடந்தன. இதுபோன்று பல அருகில் அமைந்துள்ள வயல்களிலும், காலி இடங்களில் சிதறி கிடந்தன.
அவற்றை மீட்கும் பணியில் குழுக்கள் ஈடுபட்டுள்ளன. சிதைந்த உடல்களையும், எந்தவித சேதமும் இல்லாத உடல்களையும் சேகரித்து வைத்துள்ளனர். மீட்பு பணி இன்னும் முழுமை அடையவில்லை. விமான பயணிகளின் உடல் அனைத்தையும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.