நைஸ் தாக்குதல்: பந்து போல பறந்த உடல்கள்.. நேரில் பார்த்தவர்கள் நடுக்கத்துடன் பேட்டி
நைஸ், பிரான்ஸ்: பிரான்ஸ் நைஸ் நகரத் தாக்குதலின் போது, டிரக்கில் சிக்கிய மனிதர்கள் எழுப்பிய அபயக் குரல்கள் இன்னும் தன் காதுகளில் ஒலிப்பதாகவும், உடல்கள் பந்து போல் சிதறி விழுந்ததைத் தான் கண்ணால் கண்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்ட செய்தியாளர் ஒருவர் அதிர்ச்சி விலகாமல் பேட்டியளித்துள்ளார்.
பிரான்சின் நைஸ் பகுதியில் கூட்டநெரிசல் நிறைந்த பகுதியில் டிரக்கை மோதச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டதில், சுமார் 80 பேர் வரை பரிதாபமாக பலியானார்கள். இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 20க்கும் மேற்பட்டோர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவம் உலகையே அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்த ஆலிமேண்ட் என்ற செய்தியாளர், "தாக்குதல் சம்பவம் நடைபெற்ற போது டிரக் ஒன்று கூட்டத்திற்குள் வேகமாக புகுந்தது. இதனால் அங்கு நின்றிருந்த மக்களின் உடல்கள் சிதறி காற்றில் பறந்து பாதையில் விழுந்தன.
எங்கு பார்த்தாலும் அலறல்களும், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிய மக்கள் கூட்டமுமாக இருந்தது. நிச்சயமாக அப்போது கேட்ட மரண ஓலத்தை என்னால் மறக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தைப் பார்த்து தான் அதிர்ச்சியில் உறைந்து விட்டதாகவும், 'பாதுகாப்பான இடத்திற்கு ஓடுங்கள்' என்ற சத்தமும், குடும்பத்தினரை தேடிய மக்களின் குரலும் தன் காதுகளில் விழுந்ததாக அவர் கூறியுள்ளார்.