75 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தம்பதி.... ஆல்ப்ஸ் மலையில் சடலமாக கண்டெடுப்பு
75 ஆண்டுகளுக்கு முன்பு ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன தம்பதியின் சடலங்கள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஜெனீவா: 1942-ஆம் ஆண்டு காணாமல் போன தம்பதியின் உடல்கள் ஸ்விட்ஸர்லாந்தில் உள்ள பனிமலையில் கடந்த வாரம் கண்டெடுக்கப்பட்டது.
கடல்மட்டத்தில் இருந்து 8,500 அடிக்கு மேல் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடர் முழுவதும் பனியினால் ஆன பிரதேசமாகும். ஸ்விட்ஸர்லாந்தில் உள்ள சான்ப்ளூரான் என்ற மலைத்தொடரில் இருந்த பனியாறுகள் தற்போது வற்றியுள்ளது.
இந்நிலையில் அங்குள்ள சுற்றுலா விடுதியின் ஊழியர்கள் பனி ஆற்றுப்பகுதியில் கண்ணாடி பாட்டில்களையும், ஷூக்களையும் கண்டெடுத்தனர். உடனே அதன் அருகே சென்று பார்த்தனர்.
இரு உடல்கள்
அந்த இடத்தில் தோண்டிபார்த்தனர். அப்போது இரு சடலங்கள் கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து போலீஸார் சம்பவம் இடம் விரைந்தனர். மேலும் இது குறித்த தகவல்கள் பரவியதும் சடலமாக கிடந்த தம்பதியினரின் வாரிசுகள், அது தங்களது பெற்றோர்கள் மர்செலின் மற்றும் ப்ரான்சின் டுமெளலின் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
மாடு மேய்க்க...
1942-ஆம் ஆண்டு, ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள வாலைஸ் கண்டோ என்ற பகுதியில் மர்செலின் மற்றும் ப்ரான்சின் டுமெளலின் மாடு மேய்க்க சென்றுள்ளனர். அவர்கள் அதன் பின்னர் காணாமல் போய்விட்டனர். அவர்களுக்கு 7 பிள்ளைகள். தற்போது அவர்களின் சடலங்கள் பதப்படுத்தப்பட்ட நிலையிலேயே கிடைத்துள்ளதால், பனிப்புயலில் சிக்கி அவர்கள் பலியாகியிருக்கக் கூடும் என்று தெரிகிறது.
என்ன கண்டெடுப்பு
சடலம் இருந்த இடத்தில் புத்தகங்கள், வாட்சுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டு அவற்றை தடயவியல் துறைக்கு அனுப்பியுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்களது பிள்ளைகள் கூறுகையில் எங்கள் பெற்றோரை தேடியே எங்கள் வாழ்நாளை கழித்துவிட்டோம்.
இறுதி சடங்குகள்
இவர்களின் சடலங்கள் சிதைந்து போகாமல், நல்ல நிலையில் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், அவர்களுக்கு இறுதிச் சடங்குகள் உரிய முறையில் செய்யப்படும் என தெரிவித்தனர்.