மலேசிய விமானத்தில் இருந்து பறந்து வந்து தரையில் விழுந்த கருகிய உடல்கள்: நெஞ்சை உருக்கும் வீடியோ
கீவ்: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைனில் பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டவுடன் அது கீழே விழுந்ததை அந்த வழியாக காரில் சென்ற தம்பதி செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 கடந்த ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து 298 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கிளம்பியது. விமானம் உக்ரைன் வழியாக சென்றபோது அது பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 298 பேரும் பலியாகினர்.
இந்த சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
ரஷ்ய போராளிகள்
விமானத்தை உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு போராளிகள் தான் சுட்டு வீழ்த்தியுள்ளனர் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது. ஆனால் உக்ரைன் ராணுவம் தான் விமானத்தை வீழ்த்தியது என்று போராளிகள் தெரிவித்து வருகின்றனர்.
வீடியோ
மலேசிய விமானம் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டு தரையில் விழுந்ததும் அந்த இடத்தில் ரஷ்ய போராளிகள் கருப்புப் பெட்டியை தேடியபோது எடுத்த வீடியோ கடந்த 17ம் தேதி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
புதிய வீடியோ
கடந்த 17ம் தேதி வெளியான வீடியோவால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபோது அந்த வழியாக காரில் சென்ற தம்பதி அதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவை ஜெர்மனியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
சிதறி விழுந்த உடல்கள்
கை, கால்கள் என்று மனித பாகங்களும், பயணிகளின் கருகிய உடல்களும் விமானத்தில் இருந்து பறந்து வந்து தரையில் விழுந்த காட்சியை அந்த தம்பதி வீடியோ எடுத்துள்ளனர். உடல்கள் பறந்து வந்து விழுந்ததை பார்த்த காரில் இருந்த பெண் பீதியில் அழுதுவிட்டார்.
அதிர்ச்சி
ஏராளமான மனித உடல்கள் சிதறி வந்து விழுந்ததை பார்த்த அந்த தம்பதி அதிர்ச்சி அடைந்தனர். உடல்கள் வந்து தரையில் விழ விழ அந்த பெண்ணின் அழுகை அதிகமாகிறது. விமானம் விழுந்த இடத்தில் இருந்து கரும்புகை கிளம்புவதை வீடியோவில் பார்க்க முடிகிறது.