கராச்சி விமான நிலையத்தில் எரிந்த நிலையில் 7 சடலங்கள் கண்டெடுப்பு
கராச்சி: தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க கராச்சி விமான நிலையத்தின் சரக்கு வைக்கும் பகுதியில் மறைந்திருந்த பயணிகள் 7 பேர் உடல் கருகி பலியான பரிதாபம் இன்று வெளிச்சத்துக்கு வந்தது.
நேற்றுமுன்தினம் இரவு பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகளுடன் சேர்த்து 28 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. தாக்குதலால் மீடப்பட்ட ஏர்போர்ட் நேற்று மாலை முதல் திறக்கப்பட்டது. அதன் சரக்கு பெட்டக பகுதியில் இன்று ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எரிந்த நிலையில் ஏழு உடல்களை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வந்து பரிசீலனை நடத்தினர். ஏழுபேரின் உடல்களும் முற்றிலும் கருகி போயுள்ளதால் அடையாளம் கண்டுபிடிப்பதில் சிக்கல் எழுந்தது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, குண்டுகளுக்கு அஞ்சி இப்பகுதியில் வந்து ஒளிந்து கொண்ட பயணிகள்தான் இவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் மறைந்திருந்த நேரத்தில் தாக்குதல் காரணமாக தீபிடித்து அப்பகுதி எரிந்துள்ளது. தீயில் இருந்து தப்பித்து வெளியேற முடியாமல் பரிதாபமாக அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை முப்பதை தாண்டிவிட்டது.