சுற்றுலா பயணிகளுக்காக.. நிஜ போயிங் விமானத்தையே கடலில் மூழ்க வைத்த பஹ்ரைன் அரசு!
பஹ்ரைன் நாட்டில் உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கி கேளிக்கை பூங்கா வரும் ஆகஸ்ட் மாதல் முதல் திறக்கப்பட உள்ளது.
மனாமா: பஹ்ரைன் நாட்டில் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கி கேளிக்கை பூங்காவிற்காக, ஒரு பெரிய போயிங் விமானம் கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவுக்கும் கதாருக்கும் இடையே தனித்தீவாக அமைந்துள்ள நாடு பஹ்ரைன். எண்ணை கடலும், சுற்றுலாவும் தான் இந்நாட்டின் முக்கிய வருவாய்.
எனவே பஹ்ரைனில் சுற்றுலாவை மேம்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தனியார் பங்களிப்புடன் உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கி கேளிக்கை பூங்கா ஒன்று அங்கு உருவாக்கப்பட்டுள்ளது.
கடலுக்கு அடியில் பூங்கா:
இந்த பூங்கா கடலுக்கு அடியில் ஏழு செயற்கை தீவுகளுக்கு இடையே, தையர் அல் முஹாராக் பகுதியில், சுமார் ஒரு லட்சம் சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. டைவிங் செய்யும் நீச்சல் வீரர்களுக்காகவே பிரத்யேகமாக இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
கலைநயமிக்க சிறப்பு அம்சங்கள்:
சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக கடலுக்கு அடியில் நிறைய சிறப்பு அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், செயற்கை பவளப் பாறைகள், முத்து கிடங்குகள், கலைநயம்மிக்க சிறப்பங்கள் உள்ளிட்டவை இந்த பூங்காவில் இருக்கும்.
போயிங் விமானம்:
இதற்கு எல்லாம் மேலாக 70 மீட்டர் நீளமான மிகப்பெரிய விமான ஒற்றை இந்த பூங்காவுக்காக கடலில் மூழ்கடித்துள்ளது சம்மந்தப்பட்ட நிறுவனம். செயல்பாட்டில் இல்லாத போயிங் 747 வகை விமானமான இதில் டைவர்கள் போய் வரலாம். மேலும், அதில் பவளப் பாறைகளை வளர்க்கவும் பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு ஆபத்து:
இந்த பூங்கா வரும் ஆகஸ்ட் மாதம் முதல் திறக்கப்பட உள்ளது. இந்த பூங்காவால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து எதுவும் வராது என பஹ்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த பூங்கா கடலில் சுற்றுச்சூழலுக்கு நிச்சயம் தீங்கு விளைவிக்கும் என அச்சம் தெரிவிக்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.