கட்டாயக் கல்யாணம், பலாத்காரம்... போக்கோ ஹாரம் தீவிரவாதிகளிடம் சிக்கி சீரழியும் நைஜீரியப் பெண்கள்
நைரோபி: நைஜீரியாவை ஆட்டிப்படைத்து வரும் போக்கோ ஹாரம் தீவிரவாதிகளிடம் சிக்கி அவர்களிடமிருந்து தப்பி வந்துள்ள பெண்கள், அவர்களிடம் பெண்கள் பட்டு வரும் அக்கிரமங்களை கண்ணீர் மல்க விவரித்துள்ளனர்.
ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமை அமைப்பு இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட, மீண்டு வந்த பெண்களை பேட்டி கண்டு தகவல்களை வெளியிட்டுள்ளது.
மீண்டு வந்த பெண்கள் தாங்கள் பட்ட கஷ்டங்களை அதில் விவரித்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
{ventuno}
கட்டாயக் கல்யாணம்...
சிறை பிடித்து வரும் பெண்களை கும்பல் கும்பலாக பலாத்காரம் செய்கிறார்களாம் இந்த தீவிரவாதிகள். மேலும் கட்டாயக் கல்யாணம், கடுமையான வேலைகளைச் செய்யச் சொல்வது, அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்வது, மன ரீதியாக உளைச்ல் கொடுப்பது, மத மாற்றம் செய்வது என்று அக்கிரமம் செய்கிறார்களாம் தீவிரவாதிகள்.
சிறை பிடிப்பு...
கடந்த 2009ம் ஆண்டு முதல் 500கக்கும் மேற்பட்ட பெண்களை தீவிரவாதிகள் சிறை பிடித்து தங்களது முகாம்களில் அடைத்து வைத்துள்ளனர். இவர்களில் 60 பேர் வட கிழக்கு நைஜீரியாவில் கடந்த வாரம் இரு நகரங்களிலிருந்து கடத்தப்பட்டவர்கள் ஆவர். இவர்களில் பலரும் கிறிஸ்தவர்கள். பள்ளிப் படிப்பில் இருந்து வருபவர்கள் ஆவர்.
மாணவிகள் கடத்தல்...
கடந்த ஏப்ரல் மாதம் சிபோக் நகரில் உள்ள பள்ளியிலிருந்து 276 சிறுமிகளை கடத்தியதுதான் மிகப் பெரிய கடத்தலாகும். இந்த கடத்தலுக்கு மிகப் பெரிய அளவில் கண்டனங்கள் வெடித்தன என்பது நினைவிருக்கலாம். இவர்களில் 219 பேரின் கதி என்ன என்பதே தெரியவில்லை.
ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு...
இந்த நிலையில் தீவிரவாதிகளிடமிருந்து மீண்டு வந்த சில பெண்கள் தங்களது சோகக் கதையைக் கூறியுள்ளனர். மொத்தம் 30 பெண்கள் மற்றும் மாணவிகளிடம் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு பேட்டி கண்டுள்ளது. இவர்கள் தவிர மேலும் 16 பேரும் தங்களது கஷ்டங்களைக் கூறியுள்ளனர்.
கடும் சித்ரவதைகள்...
இந்தப் பெண்களும் மாணவிகளும் 2 முதல் 3 மாதம் வரை எட்டு முகாம்களி்ல் மாறி மாறி சிறை வைக்கப்பட்டிருந்தனர். கடுமையான சித்திரவதைகளை இவர்கள் சந்தித்துள்ளனர். கைக்குழந்தை முதல் 65 வயது பெண்கள் வரை யாரையும் விட்டு வைப்பதில்லை இந்த கொடூர தீவிரவாதிகள் என்று இந்தப்பெண்கள் கூறுகிறார்கள்.
பலாத்காரம்...
உடல் ரீதியான சித்திரவதையையும், மன உளைச்சலையும்தான் தீவிரவாதிகள் அதிக அளவில் செய்கிறார்களாம். கட்டாயப்படுத்தி வேலை வாங்குவது, அடித்து உதைப்பது, தனிமையில் அடைப்பது, பயமுறுத்துவது, அச்சுறுத்துவது, கும்பல் கும்பலாக வந்து பாலியல் பலாத்காரம் செய்வது, ஒரே பெண்ணை பலர் சேர்ந்து பலாத்காரம் செய்வது, அதை மற்ற பெண்களைப் பார்க்க வைப்பது என்று சித்திரவதை செய்துள்ளனர்.
சமையல் வேலை...
தீவிரவாதிகளுக்குத் தேவையான வேலைகளைச் செய்யச் சொல்வது, ஆயுதங்களை சுமக்க வைப்பது உள்ளிட்டவையும் சித்திரவதையில் அடங்கும். கட்டாயக் கல்யாணமும் ஒரு கொடூர நடவடிக்கையாக இருந்துள்ளது. சமையல் செய்வது, முகாம்களை சுத்தம் செய்யச் சொல்வது உள்ளிட்டவையும் அடக்கம்.
15 வயது சிறுமி...
தீவிரவாதிகள் ஒரு 15 வயது சிறுமியை கடத்தி 4 வாரம் சிறை வைத்திருந்தனர். அவரை ஒரு தீவிரவாதிக்கு கட்டாயக் கல்யாணம் செய்து வைத்தனர். அந்த தீவிரவாதி, இந்த சிறுமியிடம் கத்தியைக் காட்டி பலமுறை உறவு கொண்டாராம். தினசரி உறவு கொள்வாராம் இதேபோல. அந்த நபருக்கு 30 வயதுக்கு மேல் இருக்கும். அந்தக் கொடூரனிடம் சிக்கி இந்த சிறுமி கடும் சிரமப்பட்டுள்ளார்.
கண்ணீர்கதை...
தாங்க முடியாத வலி, ரத்தப் போக்கு காரணமாக இவர் கதறி அழுதபோதும் கூட அதை அந்தத் தீவிரவாதி கண்டு கொள்ள மாட்டானாம். தினசரி இவ்வாறு செய்ததால் அந்த சிறுமி மனம் வெறுத்துப் போய் விட்டதாம். இந்த நிலையில்தான் அந்தச் சிறுமி அங்கிருந்து எப்படியோ தப்பி மீண்டு வந்துள்ளார். இன்னும் கூட தான் அனுபவித்த சித்திரவதையிலிருந்து மீள முடியாமல் உள்ளார் அந்த சிறுமி.
பாலியல் கஷ்டங்கள்...
இதேபோல திருமணமான 19 வயது பெண் ஒருவர் தான் பட்ட பாலியல் கஷ்டங்களை யாரிடமும் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு கொடூரமாக நடந்து கொண்டனர் என்று கூறுகிறார். இவரும் பலரால் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர் ஆவார்.
உடனடி நடவடிக்கை தேவை...
நைஜீரிய அரசு இந்த தீவிரவாதிகளை முழுமையாக ஒடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உறுதியாக எடுக்க வேண்டும் என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இல்லாவிட்டால் இதுபோன்ற கொடூரங்கள் தொடர் கதையாகி விடும் என்றும் அது எச்சரித்துள்ளது.