இந்த நூற்றாண்டில் நடந்த மிக மோசமான குண்டுவெடிப்பு தாக்குதல்.. சோமாலியாவில் சோகம்
சோமாலியாவில் சனிக்கிழமை சக்திவாய்ந்த குண்டு வெடித்தால் இதுவரை 500 பேர் இறந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
சோமாலியா: சோமாலியாவில் சனிக்கிழமை சக்திவாய்ந்த குண்டு வெடித்தால் இதுவரை 500 பேர் இறந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இது இந்த நூற்றாண்டில் நடந்த மிக மோசமான குண்டு வெடிப்பாகும்.
சனிக்கிழமை மதியம் ஒரு டிரக்கில் வெடித்த இந்த குண்டு காரணமாக இதுவரை 1000க்கும் அதிகமானோர் மிக மோசமான வகையில் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சோமாலியாவின் தலைநகரில் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் காரணமாக அங்கு மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
சோமாலியா தலைநகரில் குண்டுவெடிப்பு
சோமாலியா தலைநகர் மோகடிஷுவில் உள்ள மிக முக்கிய பகுதிகளில் ஒன்றான ஹோடான் சந்திப்பில் கடந்த சனிக்கிழமை மதியம் மிக மோசமான குண்டு ஒன்று வெடித்தது. டிரக் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த குண்டு வெடித்ததால் அந்தப் பகுதி மொத்தமும் ஒரு நொடியில் சின்னாபின்னமானது. அந்தப் பகுதியை சுற்றி இருந்த கடைகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் என அனைத்தும் ஒரே நொடியில் நொறுங்கி விழுந்தது.
இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை
இந்த மோசமான தாக்குதலில் இதுவரை 500 பேர் இறந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஏற்கனவே சனிக்கிழமை இரவு வரை பலி எண்ணிக்கை 256 ஆகி இருந்தது. மேலும் இந்தக் குண்டு வெடிப்பில் 1000க்கும் அதிகமானோர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயம்பட்டவர்களுக்கு மருத்துவம் பார்க்க முடியாததால் பலி எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.
குண்டு வெடிப்பை நிகழ்த்தியது யார் ?
இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது யார் என்று இதுவரை தெரிவிக்கப்படவில்லை. எந்த இயக்கமும் இந்தத் தாக்குதலுக்கு இதுவரை பொறுப்பேற்காததால் யார் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தி இருப்பார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதில் குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அங்கு நிறைய போராளி குழுக்கள் உள்ளதால் அவற்றில் ஏதாவது ஒன்று இந்தத் தாக்குதலை நிகழ்த்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சோமாலியாவில் துக்கம் அனுசரிப்பு
சோமாலியாவின் தலைநகரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் தான் இந்த நூற்றாண்டில் நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதலாகும். இறந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து அந்த அரசாங்கம் கால வரையற்ற விடுமுறையை அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளது. மேலும் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.