ஈராக் மார்க்கெட்டில் குண்டுவெடிப்பு: காய்கறி வாங்க வந்த 17 பேர் சாவு
பாக்தாத்: ஈராக்கில் இன்று நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
2011ம் ஆண்டு அமெரிக்க படைகள் ஈராக்கில் இருந்து திரும்ப சென்றன. அதன்பிறகு முதன்முறையாக ஈராக் நாடாளுமன்றத்துக்கு நாளை தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில் மக்களை வாக்களிக்க விடாமல் அச்சுறுத்தும் நோக்கில் ஈராக்கில் கடந்த இரு தினங்களாக வெடிகுண்டு தாக்குதல்களை தீவிரவாதிகள் நடத்தி வருகிறார்கள்.
தலைநகர் பாக்தாத்தில் இருந்து சுமார் 140 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அல்-சாதியா என்ற சிறு நகரில் உள்ள காய்கறி மார்க்கெட்டின் மையப்பகுதியிலும், வெளிப்பகுதியிலும் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததில் 17 பேர் உயிரிழந்திருக்கலாம், மேலும் 42பேர் காயமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. திங்கள்கிழமை ஈராக்கின் பல பகுதிகளில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்களில் 46 பேர் உயிரிழந்திருந்தனர். இன்றைய தாக்குதலையும் சேர்த்து இரு நாட்களில் அங்கு 63 பேர் கொல்லபப்பட்டுள்ளனர்.