பயண நேரத்தைப் பாதியாகக் குறைக்கும் புதிய விமானங்கள்... வெளிநாட்டுப் பயணங்கள் எளிதாகும்!
தற்போதுள்ள விமானப் பயண நேரத்தை பாதியாகக் குறைக்கும் வகையில் வெகு விரைவில் புதியவகை விமானங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன என்று பூம் விமான தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாரீஸ்: தற்போது பயன்பாட்டில் இருக்கும் விமானங்களை விட அதிவேகமாகச் செல்லும் பயணிகள் விமானத்தை இன்னும் ஆறு ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு கொண்டுவர இருப்பதாக பூம் என்ற விமானத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் பூம் என்ற புதிய விமானத் தயாரிப்பு நிறுவனம் தங்களின் விமானங்களின் திறன்கள் குறித்து விளக்கியது. இந்த நிறுவனம் தயாரிக்கும் புதிய வகை விமானங்கள் மூலம் நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு இரண்டரை மணி நேரத்தில் சென்று விட முடியும்.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் விமானங்கள் மூலம் நியூயார்க்கில் இருந்து லண்டனை அடைய ஆறு மணி நேரம் இருபது நிமிடங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல் சான்ஃபிரான்சிஸ்கோ - டோக்கியோ இடையேயான பயண தூரத்தை 11 மணி நேரத்தில் இருந்து ஐந்தரை மணி நேரமாகவும் லாஸ் ஏஞ்செல்ஸ் - சிட்னி இடையேயான 15 மணி நேர பயண தூரத்தை 7 மணி நேரமாகவும் குறைத்துவிட முடியும் என்றும் பூம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், புதிய வகை விமானங்களைப் பெற 5 முன்னணி விமான சேவை நிறுவனங்கள் தங்களிடம் பதிவு செய்திருப்பதாகவும் பூம் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.