யு.எஸ்.: பயணியின் வாயைப் பொத்தி பலாத்காரம் செய்த உபேர் டாக்சி டிரைவர்
பாஸ்டன்: அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பெண் பயணியை பாலியல் பலாத்காரம் செய்த உபேர் டாக்சி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநில தலைநகர் பாஸ்டனில் உபேர் டாக்சி ஓட்டுபவர் அலெஜான்ட்ரோ டோன்(46). கடந்த 6ம் தேதி பெண் ஒருவர் டோனின் டாக்சியில் இரவு 7.30 மணிக்கு ஏறியுள்ளார். மிடில்செக்ஸ் கவுன்ட்டியில் உள்ள கேம்பிரிட்ஜ் நகருக்கு செல்லுமாறு அந்த பெண் தெரிவித்துள்ளார். அதற்கு உடனே கட்டணத்தை ரொக்கமாக கொடுக்க வேண்டும் என்று டோன் கேட்டுள்ளார்.
உபேர் நிறுவன டாக்சிகளுக்கான கட்டணம் கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தப்படுகையில் அவர் ரொக்கமாக கேட்டுள்ளார். வழியில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்று அந்த பெண் பணத்தை எடுத்து வந்து கொடுத்துள்ளார்.
அதன் பிறகு டோன் டாக்சியை ஆளில்லா பகுதிக்கு ஓட்டிச் சென்று நிறுத்துவிட்டு பின் சீட்டுக்கு சென்றுள்ளார். அவர் அந்த பெண்ணை பலமுறை தாக்கியதுடன் அவர் சத்தம் போடாமல் இருக்க வாயை பொத்தியுள்ளார். பின்னர் டோன் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அப்பெண் கேம்பிரிட்ஜ் போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் டோனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பயணிகளின் பாதுகாப்புக்கு புதிய விதிமுறைகள் கொண்டு வரப்படும் என்று உபேர் நிறுவனம் வாக்குறுதி அளித்த சில மணிநேரங்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது. முன்னதாக டெல்லியில் 25 வயது பெண்ணை உபேர் டாக்சி டிரைவர் பலாத்காரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.