திருமணம் செய்ய மறுப்பு.. 6276கிமீ தூரம் பயணித்து ஆன்லைன் காதலியைக் கொலை செய்த சிறுவன்!
திருமணம் செய்ய மறுத்ததால் ஆன்லைன் தோழியை சிறுவன் கொலை செய்த கொடூர சம்பவம் ரஷ்யாவில் நடந்துள்ளது.
Recommended Video
மாஸ்கோ: திருமணம் செய்ய மறுத்ததால் ஆன்லைன் தோழியை, சிறுவன் ஒருவன் 6276 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் ஹபரோவ்ஸ்கவ்வை சேர்ந்த 16 வயது சிறுவன் கிரில் வொல்ஸ்கி. இவனுக்கு மாஸ்கோவைச் சேர்ந்த கிறிஸ்டினா என்ற சிறுமியுடன் ஆன்லைன் மூலம் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் நட்பு காதலாக மாற, இருவரும் வீடியோ கால் மூலம் அடிக்கடி பேசியுள்ளனர்.
மகனது காதலுக்கு ஆதரவு தெரிவித்த அவனது அம்மா, ஒருமுறை தனது மகனை திருமணம் செய்து கொள்ள விருப்பமா என கிறிஸ்டினாவிடம் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு கிறிஸ்டினா மறுப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது. இதனால் வீண் ஆசையை மனதில் வளர்க்க வேண்டாம் என மகனுக்கு அவர் அறிவுரை கூறியுள்ளார்.
மாஸ்கோ பயணம்:
ஆனாலும், கிறிஸ்டினாவை மறக்க முடியாத கிரில், தான் சேர்ந்து வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு 6276 கிலோமீட்டர் தொலைவு பயணம் செய்து மாஸ்கோ சென்றுள்ளார். பின்னர் தானும், தன்னுடைய அம்மாவும் திருமணம் ஒன்றிற்காக வந்திருப்பதாகக் கூறி கிறிஸ்டினாவை நம்பவைத்து, தனது அறைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார்.
கொலை:
அங்கு வைத்து தன்னை திருமணம் செய்து கொள்ள கிறிஸ்டினாவை அவர் வற்புறுத்தியுள்ளார். ஆனால் திருமணத்திற்கு கிறிஸ்டினா மறுக்கவே, கத்தியால் அவரை கொடூரமாகக் குத்தி கொலை செய்துள்ளார் கிரில். பின்னர் யாரும் கண்டுபிடித்து விட கூடாது என்பதற்காக அவருடைய உடலை கழிவு நீர் கால்வாயில் மூழ்கடித்துள்ளார்.
போலீசில் புகார்:
வெளியில் சென்ற கிறிஸ்டினா வீடு திரும்பாததால், பதற்றமடைந்த அவரது பெற்றோர், மகளைக் காணவில்லை என போலீசில் புகார் செய்தனர். கடந்த 2 மாதங்களாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், கிறிஸ்டினாவின் ஆன்லைன் நட்பு குறித்து ஆராய்ந்த போது கிரில்லுடனான அவரது காதல் தெரியவந்தது.
கைது:
அதனைத் தொடர்ந்து கிரிலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார், மேலும் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதன் இறுதியில் கிரில் கிறிஸ்டினாவைக் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது குற்றவாளி கிரில்லை போலீசார் கைது செய்துள்ளனர்.