காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி ஐநா அலுவலகம் எதிரில் பேரணி!
நியூயார்க்: இனப்படுகொலையை அரங்கேற்றிய ராஜபக்சே தலைமையில் இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி ஐநா சபை அலுவலகம எதிரில் மாபெரும் பேரணி இன்று (நவ 15) நடக்கிறது.
இதில் கலந்து கொள்ள அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன தமிழ் அமைப்புகள்.
அமெரிக்க நேரப்படி காலை 11 மணிக்கு ஐநா சபை அலுவலகம் முன்பு தமிழ் உணர்வாளர்கள் திரண்டு, இனப்படுகொலையை அரங்கேற்றிய இலங்கையை, அந்தப் பழியிலிருந்து தப்புவிக்க நடத்தப்படும் காமன்வெல்த் மாநாடு நடக்கக் கூடாது என கோஷமிட்டு பேரணி நடக்கிறது. பிற்பகல் 2 மணி வரை இந்தப் பேரணி நடக்கிறது.
இந்தப் பேரணியில் பங்கேற்போர், கீழ்வரும் வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தி வரவேண்டும் என தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
"இறுதிக் கட்டப் போரில் கடைசி 5 மாதங்களில் மட்டும் 70000 தமிழர்களைக் கொன்று குவித்தது இலங்கை. போர் இன்னும் ஓயவில்லை."
'காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையைத் துரத்துங்கள்'
'காமன்வெல்த் மாநாட்டுக்கு போர்க் கிரிமினலான ராஜபக்சே தலைமை ஏற்பதைத் தடுத்து நிறுத்துங்கள்'
'காமன்வெல்த் என்பது போர்க்குற்றவாளிகளின் புகலிடமா?'
'இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை அத்தனை நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்'