அடைக்கலம் கேட்டதாக கூறும் அமெரிக்க உளவாளி ஸ்நோடன்- மறுக்கும் பிரேசில்
பிரேசிலியா: அமெரிக்க உளவாளியான எட்வர்ட் ஸ்நோடன் தற்போது பிரேசிலில் தஞ்சம் அடைய விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க நாட்டின் உளவாளியான எட்வர்ட் ஸ்நோடன். இவர் அந்நாட்டு அரசு பிற நாடுகளில் வேவு பார்த்த விவகாரங்களை அம்பலப்படுத்தி சர்ச்சையை ஏற்படுத்தியவர். இதையடுத்து அமெரிக்க அரசு அவர் மீது வழக்குத் தொடர்ந்தது.
எனவே தண்டனையில் இருந்து தப்பிக்க அவர் அங்கிருந்து வெளியேறி ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
குற்றவாளியான உளவாளி:
அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும் அவரது பாஸ்போர்ட்டையும் ரத்து செய்துள்ளது. இந்த நிலையில் தற்போது ரஷ்யாவில் உள்ள ஸ்நோடனின் புகலிடக் காலம் வருகிற ஆகஸ்டுடன் முடிவடைகிறது.
பிரேசிலில் அடைக்கலம்:
எனவே, அவர் பிரேசிலில் தஞ்சம் அடையத் திட்டமிட்டுள்ளார். அதற்காக இவர் அந்நாட்டிடம் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை டி.விக்கு அளித்த பேட்டியில் அவரே தெரிவித்திருந்தார்.
நேசிக்கும் நாடு:
அதில், "நான் பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளில் தஞ்சம் கேட்டு இருக்கிறேன். ஆனால் எனக்கு பிரேசில் மிகவும் பிடித்தமான நாடாகும். அதை மனதார நேசிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
மறுத்துள்ள அமைச்சர்:
ஆனால், இதை பிரேசில் வெளியுறவு அமைச்சர் மறுத்துள்ளார். ஸ்நோடனிடம் இருந்து இதுபோன்ற விண்ணப்பம் எதுவும் பெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.