ஹேப்பீ... ஹேப்பீ... ஹேப்பீ... சர்க்கஸ் சிங்கத்தின் முதல் ‘சுதந்திர’ அனுபவம்... ஒரு டச்சிங் வீடியோ!
ரியோ டி ஜெனிரோ: சர்க்கஸ் கூண்டில் அடைபட்டிருந்த சிங்கம் முதன்முறையாக சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் ஆனந்தமும், அது பூமியில் உருண்டு புரளும் செயல்களும் பதிவான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுமே சுதந்திரமாக வாழ்வதைத் தான் விரும்புகின்றன. ஆனால், ஆறறிவு படைத்த மனிதன் தன் சுயநலத்திற்காக செல்லப்பிராணிகள் என்ற பெயரில் பறவைகள் மற்றும் சில விலங்குகளை வீட்டிலும், சர்க்கஸில் யானை, சிங்கம், புலி போன்றவற்றை கூண்டுகளிலும் அடைத்து வைக்கிறான்.
காட்டிற்கே ராஜா எனக் கூறப்படும் சிங்கம், சர்க்கஸ் கூண்டுகளில் அடைக்கப்பட்டு, வேடிக்கைக் காட்டி இயந்திர வாழ்க்கை வாழும் அவலம் நேர்கிறது.
புல்வெளியில்...
அவ்வாறு பிரேசிலில் சர்க்கஸ் கம்பெனி ஒன்றில் பல ஆண்டுகள் கூண்டில் அடைபட்டுக் கிடந்த சிங்கம் ஒன்று வனவிலங்கு சரணாலயத்தில் புல்வெளியில் வெளியில் திறந்து விடப்படும் போது, அதன் மகிழ்ச்சி வீடியோவாக பதிவு செய்யப் பட்டுள்ளது.
ஆனந்தக் கூத்தாடுகிறது..
கூண்டுகளை விட்டு, கம்பிகளைத் தாண்டி வெளியே வரும் அந்தச் சிங்கம் தாங்க முடியாத ஆனந்தத்துடன் ஓடி வருகிறது. தாய்மண்ணைக் கண்ட மனிதர்கள் ஆனந்தத்தில் மண்ணில் விழுந்து புரள்வது போல, இந்தச் சிங்கமும் சுதந்திரக் காற்றை சுவாசித்து ஆனந்தக் கூத்தாடுகிறது.
அங்கும் இங்கும் ஓடி...
புல்வெளியில் உருண்டு, புரண்டு தன் மகிழ்ச்சியைக் கொண்டாடும் இந்தச் சிங்கம், சிறு குழந்தை போல மண்ணைக் கிளறி விளையாடுகிறது. செய்வது அறியாமல் அங்குமிங்கும் ஓடுகிறது.
5 ஆண்டுகள்...
இந்த வீடியோ கடந்த 2008ம் ஆண்டு எடுக்கப் பட்டது. அப்போது இந்த சிங்கத்திற்கு 13 வயது. சர்க்கஸில் வாழ்க்கையில் இருந்து மீண்டு, 5 ஆண்டுகள் சுதந்திரமாக வாழ்ந்த இந்தச் சிங்கம் கடந்த 2011ம் ஆண்டு தனது 13 வயதில் மரணமடைந்தது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.