ஒரே நாளில் 1,188 பேர் பலி.. கொரோனா பாதிப்பில் பயங்கர ஸ்பைக்.. பீதியில் பிரேசில்
பிரேசிலியா: பிரேசில் நேற்று, வியாழக்கிழமை 1,188 பேரை கொரோனாவுக்கு பலி கொடுத்துள்ளது. உலகின் நம்பர் 2 கொரோனா ஹாட் ஸ்பாட்டான ரஷ்யாவை வேகமாக நெருங்கி வருகிறது பிரேசில்.
பிரேசில் நாட்டில், வியாழக்கிழமை நிலவரப்படி, 20,000க்கும் மேற்பட்டோர், கொரோனாவால் கொல்லப்பட்டுள்ளனர். 3,10,087 உறுதிப்படுத்தப்பட்ட கேஸ்கள் உள்ளன. ஒரே நாளில் 18,500 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், என்று சுகாதார அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம், ஆனால் பிரேசிலில் பரவலான சோதனைகளை மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
100000த்தை நெருங்கும் மரணம்.. அமெரிக்க தேசிய கொடியை 3 நாள் அரைகம்பத்தில் பறக்கவிட டிரம்ப் உத்தரவு
அதிபர்
அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கொரோனாவை கையாளுவதில் தோற்றுவிட்டார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. பிரேசில் நாட்டு பொருளாதாரத்தை இது சீர் குலைத்து வருகிறது. சமூக விலகலை பின்பற்றுவதை அவர் கடுமையாக எதிர்க்கிறார் மற்றும் சுகாதார நிபுணர்களின் எச்சரிக்கைகளை மதிக்காமல், கொரோனா வைரஸுக்கு தீர்வாக குளோரோகுயின் மாத்திரை அதிக அளவில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியுள்ளார் அவர்.
உறவு கசந்துபோனது
கவர்னர்கள் மற்றும் மேயர்களுடனான போல்சனாரோவின் உறவும் கசந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த லாக்டவுன்களை கவர்னர்கள் அறிவிப்பதால், அதிபர் கோபமடைந்துள்ளார். பொருளாதாரத்தை இயங்க வைப்பது மிகவும் முக்கியமானது என்பது அவர் கருத்தாக உள்ளது.
நிதி உதவி
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கான 60 பில்லியன் உதவித் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க அதிபர் தயங்கி வருகிறார். அப்படி நிதி ஒதுக்க வேண்டுமானால், பொதுத்துறை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை முடக்க வேண்டும் என்று, ஆளுநர்களை அவர் வலியுறுத்தி வருகிறார்.
கையெழுத்திடவில்லை
கொரோனா நிதியை மாநிலங்களுக்கும், மாநகராட்சிகளுக்கும் விநியோகிக்கும் மசோதாவுக்கு இந்த மாத தொடக்கத்தில் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. ஆனால், நிதித்துறை அமைச்சர் பாலோ கியூடெஸின் வலியுறுத்தலால், அதிபர் இதில் கையெழுத்திடவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, பொதுத்துறை ஊழியர்களுக்கான, ஊதிய உயர்வை முடக்கும் நடவடிக்கையை எடுத்தால், இதில் கையெழுத்திடுவதாக அதிபர் கூறி வருகிறார்.