சின்ன வைரஸ்.. என்னை கொரோனா என்ன செய்யும்?.. அலட்சியம் காட்டிய பிரேசில் அதிபருக்கு மீண்டும் தொற்று!
பிரேசிலியா: பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சோனேரோவுக்கு 3ஆவது முறையாக கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அவர் சற்று கலக்கமடைந்ததாக கூறப்படுகிறது.
பிரேசிலில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகில் கொரோனா பாதித்த நாடுகளில் 6 இடங்களுக்கு அப்பால் இருந்த பிரேசில், படுவேகமாக அதிக பாதிப்புகளை கொண்டு 2ஆவது இடத்திற்கு முன்னேறியது.
தற்போது முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவின் பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையில் 50 சதவீதத்தை பிரேசில் பெற்றுள்ளது. தினந்தோறும் 5 இலக்கங்களில் மக்கள் பாதிக்கப்படுவதால் அந்த நாட்டில் தொற்று வேகமாக பரவி வருவதை காட்டுகிறது.
இந்தியா அனுப்பிய மாத்திரை.. சாப்பிட்டு நல்லா இருக்கேன்.. கொரோனா பாதித்த பிரேசில் அதிபர் அறிவிப்பு
மாஸ்க்
அமேசான் காடுகளில் உள்ள பழங்குடியினருக்கும் இந்த கொரோனா பரவியது. இத்தனை பாதிப்புகள் இருக்கும் போதிலும் பிரேசிலில் ஊரடங்கையும் மாஸ்க் அணிவதையும் அந்நாட்டு அதிபர் அமல்படுத்தவில்லை. சிறிய வைரஸ் என்ன செய்யும் என கூறி ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்காமல் இருந்தார்.
பாசிட்டிவ்
மேலும் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட அனைவரும் மாஸ்க்குகளை அணிந்து கொண்டாலும் அவர் மட்டும் மாஸ்க் அணியாமல் வலம் வந்தார். தனது ஆதரவாளர்களுக்கு கைகுலுக்குவது, கட்டி அணைப்பது என செய்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு கடந்த ஜூலை 7-ஆம் தேதி நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்தது. இதையடுத்து அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
அலுவல் பணிகள்
எனினும் தனது அலுவல் பணிகளை அவர் வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் செய்து வருகிறார். இதையடுத்து இவருக்கு கடந்த 15-ஆம் தேதி மீண்டும் ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. பின்னர் மீண்டும் தனிமைப்படுத்திக் கொண்ட போல்சோனேரோ,மீண்டும் கொரோனா பரிசோதனை செய்வேன் என தெரிவித்திருந்தார்.
மருத்துவர்கள்
இந்த நிலையில் அவருக்கு நேற்றைய தினம் 3ஆவது முறையாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு மீண்டும் கொரோனா இருப்பது உறுதியானதாக அதிபர் மாளிகை செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. எனினும் அவர் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். இவர் தற்போது ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை உட்கொள்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.