உளவு பார்த்த விவகாரம்...யு.எஸ். பயணத்தை ரத்து செய்தார் பிரேசில் அதிபர்!
வாஷிங்டன்: உளவு பார்த்த அதிருப்தியால் அமெரிக்காவுக்கான தமது பயணத்தை திடீர் என ரத்து செய்திருக்கிறார் பிரேசில் அதிபர் டில்மா ரூசெப்.
அமெரிக்காவின் நட்பு நாடாக இருக்கிறது பிரேசில். ஆனால் நட்பு நாட்டையும் கூட விட்டு வைக்காமல் அமெரிக்கா எப்படி உளவு பார்த்தது என்று ஸ்னோடென் அம்பலப்படுத்தினார். இதனால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில் அக்டோபர் 23-ந் தேதியன்று அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்ததை பிரேசில் அதிபர் நேற்று ரத்து செய்திருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக பிரேசில் அதிபருடன் அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் பேசினார். அப்போது ஒபாமா, பிரேசில் அதிபரின் உணர்வுகளை புரிந்து கொள்வதாக கூறியிருக்கிறார்.
அதிபரின் பயண ரத்து தொடர்பாக பிரேசில் வெளியிட்ட அறிக்கையில், சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் உளவு நடவடிக்கைகள் நாட்டின் இறையான்மைக்கு எதிரானது. தனிநபரின் உரிமைக்கு எதிரானது. இரு நாடுகளிடையேயான ஜனநாயக உறவை சீர்குலைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.