'ட்விஸ்ட்..' உச்சத்தில் கொரோனா உயிரிழப்புகள்.. பிரேசில் அதிபர் மீதே பாயும் கொலை வழக்கு?
பிரேசிலியா: கொரோனா பரவலை மிக மோசமாகக் கையாண்ட நாடுகளில் ஒன்றாகப் பிரேசில் உள்ள நிலையில், அந்நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மீது கொலை உட்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் இன்னும் எந்த நாட்டிலும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. கொரோனா பாதிப்பு தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் அதைக் கட்டுப்படுத்துவது சவாலான காரியமாக உள்ளது.
இந்த 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. டெல்டா மாவட்டங்களுக்கு எப்போது மழை? வானிலை மையம் தகவல்
தற்போதைய சூழலில் வேக்சின் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்தும் பேராயுதமாக மாறியுள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் வேக்சின் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன.
பிரேசில் அதிபர்
பெரும்பாலான நாடுகளின் தலைவர்கள் வேக்சின் பணிகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். இருப்பினும், சில நாடுகளின் தலைவர்கள் வேக்சின் முக்கியத்துவத்தை உணராமல் தொடர்ந்து பழமைவாத கருத்துகளையே தூக்கிப் பிடித்து வருகின்றனர். அப்படியொரு நபர் தான் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ. தொடர்ந்து வேக்சினுக்கு எதிராகக் கருத்துகளைப் பரப்பி வரும் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருப்பினும், அவர் மாறிக் கொண்டதாகத் தெரியவில்லை.
கொலை வழக்கு
இந்நிலையில், கொரோனாவை மோசமாகக் கையாண்டு உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணமாக இருந்த ஜெய்ர் போல்சனாரோ மீது கொலை உட்பட 13 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டு எம்பிகளை உள்ளடக்கிய குழு அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மீது 13 வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. அதேநேரம் அதிபராக இருப்பதால் ஜெய்ர் போல்சொனாரோ மீது இத்தகைய வழக்குகள் பதிவு செய்யப்பட வாய்ப்புகள் குறைவு என்றே வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பிரேசில் நாடாளுமன்றம்
இந்த பரிந்துரை மீதான வாக்கெடுப்பு அடுத்த வாரம் பிரேசில் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இது குறித்து பிரேசில் அதிபர் இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், இந்த பரிந்துரை குறித்த தகவல் வெளியாகும் முன், கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ர் போல்சனாரோ, இந்த விசாரணையை ஒரு ஜோக் என்றும் அரசியல் ரீதியாக ஆதாயம் தேடும் நோக்கில் இந்த விசாரணை நடைபெறுவதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், இது குறித்தெல்லாம் தான் கவலைப்படுவதில்லை என்றும் இந்த விசாரணையைப் புறந்தள்ளியிருந்தார்.
கொரோனா பாதிப்பு
சர்வதேச அளவில் கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகப் பிரேசில் உள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக கொரோனா உயிரிழப்புகள் பிரேசில் நாட்டில் தான் பதிவாகியுள்ளது. பிரேசில் நாட்டில் ஆறு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கிற்கு எதிரான நிலைப்பாடு, மாஸ்க் அணிய மறுப்பது, வேக்சின் போட மறுப்பது என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கினார்.
பிரேசில் அதிபர்
அதேபோல மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படாத ஹைட்ராக்ஸி குளோரோகுயின் போன்ற மருந்துகளையும் அவர் பரிந்துரைத்தார். கொரோனா பரவலின் போது அரசின் முக்கிய தவறுகள் என்ற தலைப்பில் சுமார் 1,200 பக்கங்களைக் கொண்ட ஆவணம் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் ஆலோசனையைப் புறந்தள்ளி தனது இஷ்டத்திற்கு அதிபர் செயல்பட்டதே உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கிய காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தவிரப் பிரேசிலின் பழங்குடி மக்களுக்கு எதிரான இனப்படுகொலை, ஊழல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்த பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.