பாரத் பயோடெக் நிறுவனத்துடன் கை கோர்க்கும் பிரேசில்... முதல்கட்டமாக 50 லட்சம் தடுப்பூசிகளுக்கு ஆர்டர்
பிரேசிலியா: பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகப் பிரேசிலின் தனியார் மருத்துவமனை சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு நேற்று அனுமதி அளித்து. இதைத்தொடர்ந்து தடுப்பூசி வழங்கும் பணிகளும் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், மூன்றாம்கட்ட மருத்துவ சோதனைகளுக்கு முன்னரே பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்குப் பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கோவாக்சின் முதன்மையான தடுப்பூசி இல்லை, பேக்கப் மட்டுமே - எய்ம்ஸ் இயக்குநர் விளக்கம்
கோவாக்சினை வாங்கும் பிரேசில்
இந்நிலையில், பிரேசிலின் தனியார் மருத்துவமனை சங்கம், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக 50 லட்சம் தடுப்பூசிகளை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து வரும் நாள்களில் பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகவும் பிரேசிலின் தனியார் மருத்துவமனை சங்கம் கூறியுள்ளது. தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டாலும்கூட பிரேசில் அரசின் அனுமதிக்கு பிறகே தடுப்பூசியைப் பயன்படுத்த முடியும்.
பிரேசில் அதிபர்
பிரேசில் நாட்டின் அதிபராக தற்போது தீவிர வலதுசாரியான ஜெய்ர் போல்சனாரோ உள்ளார். பிரேசில் தடுப்பூசி அளிக்கும் பணிகளை இவர் தாமதப்படுத்துவதாகவும் தடுப்பூசிக்கு எதிரான செய்திகள் பரப்பப்படுவதற்கு இவரும் காரணமாக உள்ளதாகவும் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருப்பினும், ஜெய்ர் போல்சனாரோ தடுப்பூசிக்கு ஆதரவாக எவ்வித கருத்துகளையும் இதுவரை தெரிவிக்கவில்லை. மாறாக தற்போது தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் எண்ணமில்லை என்றே கூறியுள்ளார்.
தனியார் மருத்துவத் துறை
பிரேசில் அரசு தடுப்பூசி வழங்கும் பணிகளைத் துரிதப்படுத்த எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை. இதனால் மாநில அரசாங்கங்களும், தனியார் மருத்துவத் துறையையும் மக்களுக்குத் தடுப்பூசி வழங்கும் பணிகளை தாங்களே தொடங்க முயல்கிறது. இதன் காரணமாக முதலில் ஆபத்தானவர்களுக்குப் பதில் வசதி படைத்தவர்களுக்குத் தடுப்பூசி கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி
ஏற்கனவே, 10 கோடி ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி டோஸ்களுக்கு பிரேசில் ஆர்டர் அளித்துள்ளது. அவற்றில் 20 லட்சம் தடுப்பூசிகள் பிரேசிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும், அந்தத் தடுப்பூசியின் பயன்பாட்டிற்குப் பிரேசில் அரசு அனுமதி அளிக்காததால், பொதுமக்களுக்குத் தடுப்பூசி வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அண்டை நாடுகள் எல்லாம் தடுப்பூசி வழங்கும் பணிகளைத் தொடங்கிவிட்ட நிலையில், பிரேசில் ஏன் தடுப்பூசி வழங்கும் பணிகளைத் தொடங்கவில்லை என்று அந்நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்பில்லை
இருப்பினும் கோவாக்சின் தடுப்பூசி அனுமதி குறித்து அரசிடம் பேசி வருவதாகவும் அரசு ஆர்டர் செய்துள்ள தடுப்பூசிகளுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் பிரேசில் தனியார் மருத்துவமனைகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், தடுப்பூசி வழங்கும் பணிகளை மார்ச் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிரேசிலில் கொரோனா பாதிப்பு
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா காரணமாக அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நாடாகப் பிரேசில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை 77 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 1.97 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.