குட் பை சொல்ல மாட்டேன்... திரும்ப வருவேன்... டிஸ்மிஸ் ஆன பிரேசில் அதிபர் தில்மாஉறுதி!
பிரேசிலியா: பட்ஜெட்டை திருத்தி முறைகேடு செய்து நாட்டிற்கு பொருளாதார சீர்குலைவு ஏற்படுத்தியதாகக் கூறி பிரேசில் நாட்டு அதிபர் தில்மா ரூசெப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தென் அமெரிக்காவின் மிகப் பெரிய நாடு பிரேசில். இங்கு இடதுசாரி தொழிலாளர் கட்சியின் சார்பில் அதிபராக பதவி ஏற்று செயல்பட்டுக் கொண்டிருப்பவர் தில்மா ரூசெப். கடந்த இரு முறையாக நடைபெற்ற அதிபர் தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்றவர் இவர்.
இந்நிலையில், தேசிய பட்ஜெட்டை திருத்தி முறைகேடு செய்து நாட்டிற்கு பொருளாதார சீர்குலைவு ஏற்படுத்தியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து கடந்த மே மாதம் தில்மா ரூசெப் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து, பிரேசில் நாடாளுமன்றத்தில் தில்மா மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நேற்று கொண்டு வரப்பட்டது. அப்போது, நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 81 உறுப்பினர்களில் 61 பேர் தில்மா ரூசெப்புக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் அவரின் அதிபர் பதவி பறிக்கப்பட்டது.
கடந்த 2011ம் ஆண்டு பிரேசிலின் முதல் பெண் அதிபராக தில்மா ரூசெப் பதவியேற்றார். பின்னர், 2014ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மீண்டும் அவர் வெற்றி பெற்றார். வரும் 2018ம் ஆண்டு டிசம்பரில் பதவிக் காலம் முடிவடைய இருந்த நிலையில், தற்போது அவர் அதிபர் பதவியை இழந்திருக்கிறார்.
இதனையடுத்து பிரேசிலின் தற்காலிக அதிபராக இருந்த மிகைல் டெமர் அதிபராக பதவி ஏற்றார்.
தில்மா ரூசெப்பிடம் இருந்து அதிபர் பதவியை பறித்தற்கு அந்நாட்டில் உள்ள வலதுசாரி கட்சிகளின் பங்கு பெருமளவு உள்ளது என தில்மாவின் ஆதவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தப் பதவி பறிப்பு குறித்து தில்மா ரூசெப், நான் யாருக்கும் பை பை சொல்ல மாட்டேன். திரும்ப வருவேன் என்று தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதிபர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து நீக்கப்பட்டதால் பிரேசில் அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.