ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி - பிரேசில் தன்னார்வலர் உயிரிழப்பு
ரியோடி ஜெனிரியா: இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா தடுப்பூசி சோதனையில் பிரேசில் தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனமும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனையில் இருந்து வருகிறது. உலக நாடுகள் பலவும் ஆஸ்ட்ரா ஜெனிகா தயாரித்த கொரோனா தடுப்பூசியை சோதனையில் வைத்திருக்கின்றன.
இந்தச்சூழலில் அந்த தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிரேசிலை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்த விவகாரம் உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பிரேசில் சுகாதாரத்துறை ஆணையம், தன்னார்வலர் உயிரிழந்தது பற்றி விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.
மேலும், தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்த காரணத்தால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி சோதனையை பிரேசில் நிறுத்தப்போவதில்லை எனக் கூறியுள்ளது. கொரோனா சோதனையில் ஈடுபடுவோரின் ரகசியத்தை காக்கும் பொருட்டு உயிரிழந்த தன்னார்வலர் குறித்த முழு விவரங்களை பிரேசில் அரசு வெளியிட மறுத்துள்ளது.
ரஷியா, இந்தியா, இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா என உலகளவில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சோதனைக்கட்டங்களை நிறைவு செய்து விரைவில் கொரோனா தடுப்பூசியை வெளியிடுவதற்கு உலக நாடுகள் பலவும் போட்டிப்போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பிரேசில் உயிரிழப்பு விவகாரத்தால் ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்தின் பங்குகள் 1.7 என்ற அளவுக்கு கடுமையாக வீழ்ச்சியை சந்தித்துள்ளன.