கொரோனா பரவலை தடுக்க வித்தியாச முயற்சி.. காருக்குள் திருமணங்களை நடத்தி அசர வைக்கும் பிரேசில்!
பிரேசில் நாட்டில் கொரோனா பரவலை தடுக்க காருக்குள்ளே திருமணங்கள் நடைபெற்றன.
பிரேசிலியா: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில், பிரேசில் நாட்டில் காருக்குள்ளே வைத்து திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன.
கொரோனாவை தடுக்க இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக திருமணம் போன்ற விழாக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, திருமண விழாக்களை மிக எளிமையாக நடத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக, பல ஜோடிகள் தங்கள் வீட்டுக்குள்ளேயே, நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் திருமணம் செய்து வருகின்றனர்.
கொரோனாவுக்கு டாடா பைபை காட்டிய 103 வயது பாட்டி.. ஜில்லான பீர் குடித்து செம அட்டகாசம்!
காருக்குள் திருமணம்
இதற்கு ஒருபடி மேலே போய், பிரேசில் நாட்டில் காருக்குளேயே அமர வைத்து திருமணம் நடத்தி வருகின்றனர். பிரமாண்டமாக தான் திருமணம் செய்வோம் என அடம்பிடிப்பவர்களுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்குவதில்லை. பாஸ்ட்புட் மாதிரியான திருமணங்களுக்கு மட்டுமே அனுமதியாம்.
5 நிமிடத்தில் முடிந்த திருமணம்
கடந்த வியாழக்கிழமை பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ அருகில் உள்ள சாண்டா குரூஸ் எனும் இடத்தில் பல பாஸ்ட் புட் திருமணங்கள் நிகழ்ந்தன. ஒவ்வொரு திருமணத்திற்கும் மொத்தம் 5 நிமிடங்கள் தான் அனுமதி. அதற்குள் அனைத்தையும் முடித்து இடத்தை காலி செய்துவிடுகின்றனர்.
காரில் அமர்ந்தபடி..
மணமகனும், மணமகளும் சர்ச் வாசலுக்கு காரில் வந்ததும், அங்கு தயாராக இருக்கும் பதிவாளர், தம்பதியிடம் திருமணம் உறுதிமொழியை பெறுகிறார். பின்னர் மணமகனும், மணமகளும் ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். சில நிமிடங்களில் திருமணம் முடிந்து விடுகிறது.
மாஸ்க் முத்தம்
அந்நாட்டு கலாச்சாரப்படி திருமணம் முடிந்த உடன் புதுமண தம்பதியர் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்ள வேண்டும். ஆனால் இந்த வழக்கத்தைக்கூட பெரும்பாலான ஜோடிகள் தவிர்த்துவிட்டனர். சிலர் மாஸ்க் அணிந்தபடியே உதட்டோடு உதடு பதித்து போட்டோவுக்கு போஸ் மட்டும் கொடுத்துவிட்டு கிளம்பினர்.
தம்பதிக்கு பாராட்டு
பிரேசில் நாட்டில் கொரோனா பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கக்கூடிய இந்த சூழலில், மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். இதுபோன்று திருமணம் செய்ய பலரும் முன்வந்துள்ளனர். இதன் மூலம் சமூக இடைவெளியை சிறப்பாக கடைப்பிடித்து, கொரோனாவை வெல்ல முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.