பேய்களுடன் ஓரு சுற்றுலா.. திகில் கிளப்பும் பிரேசில் ஹாரர் பூங்கா.. அத்தனை பேயும் இங்க தான் இருக்கு!
கொரோனா தொற்று காரணமாக பிரேசில் நாட்டில் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த பிரபல திகில் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
பிரேசிலியா: கொரோனா தொற்று காரணமாக பிரேசில் நாட்டில் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த பிரபல திகில் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உலகில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் பிரேசிலும் ஒன்று. கொரோனா தொற்று பரவலில் நேற்று வரை இரண்டாம் இடத்தில் இருந்த பிரேசில், இந்தியா அந்த இடத்தை பிடித்துவிட்டதால் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.
ஒருபக்கம் கொரோனா பரவல் அதிகமானாலும், மறுபக்கம் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதை பார்க்க முடிகிறது. இந்தியாவில் இம்மாதமும் ஊரடங்கை நீட்டித்துள்ள மத்திய அரசு, பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளதால், மக்கள் மீண்டும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
அதேபோல் தான் பிரேசில் நாட்டிலும் ஊரடங்கு கட்டுப்பாட்டில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக உணவகங்கள், கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்டவைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
பூ ஒன்று புயலாக மாறியது... சர்..சர்... டுர்..டுர்... பைக் ஆம்புலன்ஸ் ஓட்டி அசத்திய ரோஜா..!
ஹோபி ஹாரி பூங்கா
அந்த வகையில், பிரேசிலின் வின்ஹெதோ நகரில் அமைந்துள்ள பிரபல திகில் பூங்காவான ஹோபி ஹாரி பூங்கா பல மாதங்கள் கழித்து பார்வையாளர்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதையறிந்த உள்ளூர் மக்கள் முதல் நாளே பூங்காவில் திரண்டுவிட்டனர்.
ஜோம்பீக்கள்
பயமும் ஒருவகையில் நமக்கு சந்தோஷம் தரக்கூடியவை தான் என்பதை நிரூபிக்கின்றன இதுபோன்ற திகில் பூங்காக்கள். பேய் வேடமிட்ட மனிதர்கள் நாம் எதிர்பாராத சமயத்தில் திடீரென முன்வந்து பயமுறுத்துவதை வாடிக்கையாளர் வெகுவாக என்ஜாய் செய்கின்றனர். சாலைகளில் ஆங்காங்கே ஜோம்பீக்கள் நடமாடிக்கொண்டிருப்பதை எல்லாம் சர்வ சாதாரணமாக பார்க்க முடியும்.
அது மட்டும் ஏமாற்றம்
கொரோனா தொற்றுக்கு முன்பு இந்த பூங்காவில் பார்வையாளர்கள் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது காரைவிட்டு இறங்க அவர்களுக்கு அனுமதி இல்லை. இது தங்களுக்கு ஏமாற்றமாக உள்ளதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர். ஆனால் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுவதால், அதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என பூங்கா நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பேய்.. பூதம்.. வேதாளம்
2.7 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட ஹோபி ஹாரி திகில் பூங்காவில் பார்வையாளர்கள் சுமார் 30 நிமிடங்கள் வரை தங்கள் காரில் மெதுவாக சுற்றிவர முடியும். வழியில் பேய், பூதம், அசுரர்கள், ஜோம்பீக்கள், வேதாளம் உள்பட அத்தனை பேய் வகைகளையும் பார்க்க முடியும். இதுபோன்ற திரில் எண்டர்டெயின்மெண்டுக்கு உத்தரவாதம் தருகிறது அந்த பூங்கா.
குதூகலத்தில் மக்கள்
பல மாதங்களாக வீட்டிலேயே அடைப்பட்டு கிடந்த மக்களுக்கு, இந்த திகில் பூங்காவின் திறப்பு குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காரில் இருந்தபடியே சர்க்கஸ் உள்ளிட்டவைகளை பார்க்கவும் பிரேசில் அரசு அனுமதி அளித்துள்ளது. சில இடங்களில் திறந்தவெளி தியேட்டர்களும் திறக்கப்பட்டுள்ளன.