ஹாங்காங் ரயில் நிலையத்தில் தாய்ப்பால் கொடுத்து ‘அம்மாக்கள்’ நூதன போராட்டம்
ஹாங்காங்: ஹாங்காங்கில் உள்ள ரயில் நிலையத்தில் கிட்டத்தட்ட 100 இளம்தாய்மார்கள் பிளாட்பாரத்தில் அமர்ந்து கூட்டாக தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து, பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பதற்கு உள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வித்தியாசமாக போராட்டம் நடத்தியுள்ளனர்.
பொது இடங்களில் குழந்தைகளுக்கு பால் தருவது என்பது தாய்மார்களுக்கு எப்போதும் சிரமமான விஷயமாகவே உள்ளது. எனவே, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீனப் பெண்கள் இணைந்து அந்நாட்டு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த பிளாஷ் மாப் நிகழ்ச்சிக்கு "மமாமில்க் பேபி அலயன்ஸ்" என்ற தாய்ப்பால் ஆதரவு அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. தாய் வாய் ரயில் நிலையத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
சிரமங்கள்
இதுகுறித்து அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், "பொது இடங்களில் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க பல சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது. அவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள். கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதைத் தடுக்க அரசு சட்டம் கொண்டு வர வேண்டும்.
தனி இடம் இல்லை...
குறிப்பாக ஷாப்பிங் மால்களில் இளம் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு பாலூட்ட வேண்டுமென்றால் அதை கழிப்பறைக்குப் போய் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். மேலும் பெரும்பாலான மால்களில் தாய்ப்பால் கொடுக்க வசதியாக தனி இடம் இல்லை.
பிளாஷ் மாப்...
இதனால் பொது இடங்களில் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியாமல் தாய்மார்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அவமானத்தையே அவர்கள் சந்திக்கின்றனர். இதை எதிர்த்துத்தான் இந்த பிளாஷ் மாப் நிகழ்ச்சி" என்கின்றனர்.
4 வருடங்களாக...
கடந்த நான்கு வருடமாக இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது இந்த அமைப்பு. இருப்பினும் இன்னும் அவர்களின் கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்படாமல் உள்ளது.
விழிப்புணர்வு...
ஹாங்காங்கில் 2.3 சதவீத குழந்தைகளுக்குத்தான் குறிப்பிட்ட வயது வரை தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. பெரும்பாலானோர் குறைந்த காலத்திலேயே தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி விடுகின்றனர். இருப்பினும் இதுதொடர்பாக தற்பது பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.