7.5 லட்சம் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு நிம்மதி.. ஹெச்1-பி விசா விதிமுறையில் மாற்றம் இல்லை!
வாஷிங்டன்: ஹெச்1-பி விசா வைத்துள்ளவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் திட்டம் எதுவும் அமெரிக்க அரசுக்கு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய தொழில்நுட்ப நிறுவன பணியாளர்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் அரசின் கொள்ளை, அமெரிக்காவுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்பது. இதன் ஒரு பகுதியாக, ஹெச்1-பி விசா விதிமுறைகளில் திருத்தம் செய்ய அமெரிக்க அரசு முயல்வதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நடவடிக்கையால், இந்தியாவை சேர்ந்த சுமார் 7,50,000 பேர், நாட்டை விட்டு வெளியேற்றப்படும் சூழல் உருவாகும் என கணிக்கப்பட்டது.
மாற்றம் இல்லை
இந்த நிலையில், அமெரிக்க குடியுரிமை சேவைகள் துறை (USCIS) அதுபோன்ற எந்த ஒரு திட்டத்திலும் இல்லை என்று அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக பிடிஐ ஏஜென்சி இன்று செய்தி வெளியிட்டுள்ளது. "நாங்கள் விசா ஒழுங்குமுறை விதிகளில் எந்த மாற்றமும் செய்யும் திட்டத்தில் இல்லை. எனவே, ஹெச்1-பி விசா வைத்துள்ளோர் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட தேவையில்லை" என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
தேவையில்லை
அமெரிக்க குடியுரிமை சேவைகள் துறையின் மீடியா தொடர்பு தலைமை அதிகாரி ஜொனாதன் வித்திங்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விசா நடைமுறையில் மாற்றங்கள் வந்தால் கூட, ஹெச்1-பி விசா வைத்துள்ளோர் நாட்டை விட்டு வெளியேற தேவை இருக்காது. AC21 பிரிவு 106 (a) - (b)-ன்கீழ், ஓராண்டு இன்க்ரிமென்ட்டில் நீட்டிப்பு கேட்க முடியும் (request extensions in one-year increments).
அதிபர் கொள்கை
அதிபரின் அமெரிக்க பொருளை வாங்குவீர், அமெரிக்கர்களையே வேலைக்கு சேர்ப்பீர் என்ற கோஷத்தின் அடிப்படையில், சில கொள்கை முடிவுகளை மாற்றம் செய்வது, ஒழுங்குமுறை செய்வது போன்ற பணிகளில் ஈடுபட பரிசீலிக்கிறோம். இதில் பணியாளர்களுக்கான விசா திட்டங்களும் உள்ளடங்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு முதலிடம்
அமெரிக்காவில் 2016ம் ஆண்டில், ஹெச்1-பி விசா பெற்ற இந்தியர்கள் எண்ணிக்கை 1.26 லட்சமாக இருந்தது. சீனா 2வது இடத்தில் உள்ளது. அந்த நாட்டை சேர்ந்த 21657 பேர் ஹெச்1-பி விசா பெற்றிருந்தனர். ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்துதான் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் செல்கின்றன. குறிப்பாக ஐடி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மனைவியோடு அமெரிக்காவில் குடியேற ஆர்வம் காட்டுகிறார்கள்.