பிரெக்ஸிட்.... வேலை இழக்கும் அபாயத்தில் பிரிட்டன் வாழ் இந்தியர்கள்
லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதால் அந்நாட்டில் பணிபுரியும் இந்தியர்கள் பணியிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான வாக்கெடுப்பு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளனர். இதனால் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார்.
இதனிடையே பிரிட்டனின் இந்த வெளியேறும் முடிவால் அந்நாட்டில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். பிரிட்டனில் மொத்தம் 4 லட்சம் தமிழர்கள் உள்ளனர். இவர்களில் 3.5 லட்சம் பேர் ஈழத் தமிழர்கள். எஞ்சியவர்கள் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள்.
தற்போதைய பிரிட்டனின் முடிவால் இந்தியாவில் இருந்து அந்நாட்டுக்கு குடியேறுவோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.. அதேநேரத்தில் பல மென்பொருள் நிறுவனங்கள் பிரிட்டனில் இருந்து வெளியேறவும் முடிவு செய்துள்ளதால் இவற்றில் பணிபுரிந்த இந்தியர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாவர்.
குறிப்பாக ஜெர்மனி உள்ளிட்ட இதர ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சார்ந்து பிரிட்டனில் நிறுவனங்களை நடத்திய இந்தியர்கள் தங்களது தொழில்களைக் கைவிடவோ அல்லது மாற்று ஏற்பாடுகளைச் செய்தாக வேண்டிய நிலைக்கோ தள்ளப்பட்டுள்ளனர்.