ஐரோப்பிய யூனியலிருந்து பிரிட்டன் வெளியேற பெரும்பாலான மக்கள் ஆதரவு!
லண்டன்: ஐரோப்பிய யூனியலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமா வேண்டாமா என்ற பொதுவாக்கெடுப்பில், வெளியேற வேண்டும் என்ற கருத்துடைய மக்களின் கை ஓங்கியுள்ளது.
அதே நேரம், வெளியேற வேண்டாம் என்ற கருத்துள்ளவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகவே உள்ளது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு மட்டங்களில் இருந்து நாளுக்கு நாள் வலுப்பெறத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக நாட்டு மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார் பிரதமர் டேவிட் கேமரூன்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக வேண்டாம் என அமெரிக்கா, ஜெர்மனி, சீனா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் தலைவர்களும், நேட்டோ, காமன்வெல்த் அமைப்புகளின் தலைவர்களும் கேட்டுக் கொண்டன.
எனினும் ஜூன் 23-ந்தேதி (நேற்று) பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என கடந்த பிப்ரவரி மாதமே கேமரூன் அறிவித்தார். அதன்படி ஐரோப்பிய யூனியனில் தொடர்வதா? வேண்டாமா? என்பதைத் தீர்மானிக்கும் பொதுவாக்கெடுப்பு நேற்று பிரிட்டனில் நடந்தது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
பொதுவாக்கெடுப்பில் கடும் போட்டியில் ‘வெளியேறவேண்டும்' என்ற தரப்பு குறைந்த வாக்கு விகிதத்தில் முன்னிலை பெற்று உள்ளது.
வடகிழக்கு இங்கிலாந்து, வேல்சும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறவேண்டும் என்ற தரப்புக்கு ஆதரவாக வாக்களத்திருக்கின்றன என்று தகவல் வெளியாகியுள்ளது.
அந்தப் பகுதிகளில் பொதுத் தேர்தல்களில் பதிவான வாக்குகளை விட இந்தத் தேர்தலுக்கு அதிக வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. ஸ்காட்லாந்தும், வட அயர்லாந்தும், பிரிட்டன் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்திலேயே இருக்கவேண்டும் என்ற தரப்புக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.
இன்னும் பெருமளவு வாக்குகள் எண்ண வேண்டியிருக்கும் நிலையில், போட்டி கடுமையாக இருப்பதாகவே தெரிகிறது.
இந்திய நேரப்படி காலை 8 மணி நிலவரப்படி, வாக்கு எண்ணிக்கையில், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற தரப்புக்கு 53 லட்சம் வாக்குகளும், ஒன்றியத்திலேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற தரப்புக்கு சுமார் 51 லட்சம் வாக்குகளும் கிடைத்துள்ளன.