ஈராக் குறித்த நியூஸின்போது சொந்தக் கருத்தையும் சேர்த்துச் சொன்ன என்பிசி செய்தியாளர் சஸ்பெண்ட்!
நியூயார்க்: அமெரிக்காவின் என்பிசி தொலைக்காட்சியின் "நைட்லி நியூஸ்" நிகழ்ச்சியின் எடிட்டரும், தொகுப்பாளருமான பிரையன் வில்லியம்ஸ் 6 மாத காலம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். செய்தியின்போது தனது சொந்தக் கருத்தையும் இவர் கோர்த்து விட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாராம்.
என்பிசி தொலைக்காட்சியின் ‘நைட்லி நியூஸ்' நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியின் நிர்வாக எடிட்டராகவும், தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வரும் வில்லியம்ஸ்க்கு எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர்.
கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் 2003 ஆண்டு ஈராக் போர் பற்றி சிறப்பு செய்தி ஒளிபரப்பானது. அதில் உண்மைக்குப் புறம்பாக தனது சொந்த கருத்தை பிரையன் கூறியதாக புகார் எழுந்தது. எனவே பிரையன் வில்லியம்ஸ் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று என்பிசி நிறுவனத் தலைவர் டெபோரா டர்னெஸ் கூறியிருந்தார்.
தற்போது பிரையனை சஸ்பெண்ட் செய்துள்ளார் டர்னெஸ். இதுகுறித்து ஊழியர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ள டர்னெஸ், 6 மாதகாலம் வில்லியம்ஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதில், என்பிசியில் 22 ஆண்டு காலம் பணிபுரிந்த பிரையன், அமெரிக்க மக்களிடையே மிகவும் பரிச்சயமானவர். அவர் நமது நிறுவனத்திற்கு மிகவும் முக்கியமானவர்.
ஆனாலும் அவர் செய்த சிறு தவறினால் தற்காலிகமாக தனது பணியில் தொடர இயலாத நிலையில் இருக்கிறார் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னால் நைட்லி நியூஸ் நிகழ்ச்சியில் தொடர இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக தனது வாசகர்களுக்கு வில்லியம்ஸும் அறிவித்துள்ளார். இது தற்காலிகமான பிரிவுதான். மீண்டும் புதுப்பொலிவோடு உங்களை சந்திப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
நைட்லி நியூஸ் நிகழ்ச்சி 10 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அடுத்த 5 ஆண்டுக்கான ஒப்பந்தத்தில் கடந்த டிசம்பர் மாதம் கையெழுத்திட்டுள்ள வில்லியம்ஸ்க்கு ஆண்டுக்கு பத்துமில்லியன் டாலர் சம்பளமாக வழங்கப்பட உள்ளது.
தற்போது பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள வில்லியம்ஸ்க்கு 6 மாதகாலம் சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.