சவுதி அரேபியாவிலும் பரவும் ஆட்கொல்லி எபோலா வைரஸ்?
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கி சியர்ரா லியோன், லைபீரியா, கினியா மற்றும் நைஜீரியாவில் 600க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் லைபீரியாவில் பணியாற்றி வந்த கென்ட் பிரான்ட்லி மற்றும் நான்சி ரைட்போல் ஆகிய அமெரிக்க டாக்டர்களை எபோலா வைரஸ் தாக்கியது.
பிரான்ட்லி விமானம் மூலம் கடந்த 2ம் தேதி அமெரிக்கா கொண்டு வரப்பட்டு அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கைலக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே நான்சி செவ்வாய்க்கிழமை தனி விமானம் மூலம் அமெரிக்கா கொண்டு வரப்பட்டார். அவரும் பிரான்ட்லி சிகிச்சை பெறும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வரும் சியர்ரா லியோன் மற்றும் லைபீரியாவுக்கு விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம். இந்த மாதம் முழுவுதும் சியர்ரா லியோன், லைபீரியாவுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே சவுதி அரேபியாவைச் சேர்ந்த 40களில் இருக்கும் ஒருவர் வியாபார விஷயமாக சியர்ரா லியோன் சென்றுவிட்டு நாடு திரும்பியுள்ளார். நாடு திரும்பிய அவருக்கு எபோலோ வைரஸ் தாக்கியதன் அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதையடுத்து அவர் ஜெத்தாவில் உள்ள ரெட் சீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எபோலா தாக்குதல் உள்ளதா என்பதை கண்டறிய அவரின் ரத்த மாதிரி உலக சுகாதார மையத்தின் ஆதரவில் செயல்படும் சர்வதேச பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.