மலேசிய விமானத்தில் சீட் கிடைக்காமல் போனதால் உயிர் தப்பிய இங்கிலாந்து தம்பதி!
ஆம்ஸ்டர்டாம்: ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் செல்லக் காத்திருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு விமானத்தில் சீட் கிடைக்காமல் போனதால் உயிரிக்கும் அபாயத்திலிருந்து தப்பியுள்ளனர்.
இ்ங்கிலாந்தைச் சேர்ந்தர்கள் சிம் பேரி மற்றும் இஸ்ஸி. இவர்கள் விடுமுறைக்காக கோலாலம்பூர் செல்ல முடிவு செய்தனர். கைக்குழந்தையுடன் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் வந்த இவர்கள் மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச் 17 விமானத்தில் இடம் இருக்கிறதா என்று விசாரித்துள்ளனர்.
ஆனால் சீட் இல்லை என்று அவர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. கடுமையாக முயற்சித்தும் கூட இடமில்லை என்று கூறப்பட்டதால் இருவரும் ஏமாற்றமடைந்தனர்.
இதையடுத்து கே.எல்.எம். நிறுவன விமானத்தை அவர்கள் பிடித்து அதில் பயணித்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைப் பிடிக்க முடியாமல் போனது. காரணம், அந்த விமானம்தான் உக்ரைன் நாட்டின் மீது பறந்து கொண்டிருந்தபோது ஏவுகணை வீசித் தகர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசிய விமான விபத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து சிம் கூறுகையில், "எனக்கு அப்படியே வயிற்றைக் கலக்குவது போல இருந்தது செய்தியைக் கேட்டு. இதயத் துடிப்பு என் வசம் இல்லை. ஏதோ கடவுள்தான் மேலே இருந்து எங்களை நோக்கி இதில் போகாதே என்று கூறியது போல உணர்கிறேன்.
நாங்கள் எப்போதுமே மலேசியன் ஏர்லைன்ஸில்தான் பயணிப்போம். ஆனால் இந்த முறை அதில் பயணிக்க முடியாமல் போனதற்காக வருத்தப்படவில்லை, மாறாக மகிழ்ச்சி அடைகிறோம்" என்றார்.