30 ஆண்டுகளுக்கு முன்பு ரயிலில் தொலைந்த பர்ஸ் கிடைத்த அதிசயம்.. இங்கல்ல, இங்கிலாந்தில்
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தான் 30 ஆண்டுகளுக்கு முன்பு தொலைத்த பர்ஸை திரும்பப் பெற்றுள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் விவசாயியான டெரக் காம்பள். தற்போது 60களில் இருக்கும் அவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு நார்த் நார்த்ஃபோக் ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது அவரின் பர்ஸை ரயிலில் தவறிவிட்டார்.
இந்நிலையில் 30 ஆண்டுகள் கழித்து அந்த ரயிலை சீரமைக்கையில் இருக்கைக்கு அடியில் பர்ஸ் ஒன்று கிடந்ததை ரயில் டிரைவர் மைக்கேல் மாஸி என்பவர் பார்த்தார். பர்ஸை திறந்து பார்த்தபோது அதில் டெரக் காம்பிள் என்ற பெயர் அடங்கிய அட்டை, ஒரு பவுண்ட் நோட்டு, காசுகள், டெரக்கின் ரக்பி வீட்டு முகவரி இருந்தது.
இதையடுத்து மைக்கேல் பர்ஸை டெரக்கை தேடிக் கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைக்க நினைத்தார். ஒருவழியாக அவர் நார்த்ஹாம்ப்டனில் வசிக்கும் டெரக்கின் மகனை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தார்.
அதன் பிறகு டெரக் ரயில் நிலையத்திற்கு வந்து தனது பர்ஸை வாங்கிக் கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில்,
30 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த பர்ஸ் கிடைத்ததில் ஆச்சரியம் இல்லை, மகிழ்ச்சியாக உள்ளது. இதன் மூலம் என் பழைய காலத்து நினைவுகள் எல்லாம் மறுபடியும் என் கண் முன்பு வருகிறது என்றார்.