கடலில் மலேசிய விமானத்தை தேட வந்திருக்கும் இங்கிலாந்து அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்
பெர்த்: இந்திய பெருங்கடலுக்குள் விழுந்த மலேசிய விமானம் எம்.ஹெச். 370-ஐ தேடும் பணியில் இங்கிலாந்தின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஈடுபட்டுள்ளது.
கடந்த 8ம் தேதி 239 பேருடன் மலேசியாவில் இருந்து சீனா கிளம்பிய விமானம் மாயமானது. அந்த விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாகவும், அதில் பயணித்த அனைவரும் இறந்துவிட்டதாகவும் மலேசியா அறிவித்தது.
ஆனால் அதற்கான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.
தேடல்
தெற்கு இந்திய பெருங்கடலில் மலேசிய விமானத்தை பல்வேறு நாட்டு விமானங்களும், கப்பல்களும் தேடி வருகின்றன. அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக தேடல் பணி பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
இங்கிலாந்து
விமானத்தை தேட இங்கிலாந்து அனுப்பிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் தெற்கு இந்திய பெருங்கடலை இன்று வந்தடைந்தது. இதனால் தேடல் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புது தெம்பு பிறந்துள்ளது.
நம்பிக்கை
இங்கிலாந்து நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கிய விமானத்தை கண்டுபிடிக்க பேருதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இத்தனை நாட்கள் தேடியும் விமானத்தின் பாகங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாலிவுட் இயக்குநர்
ஆஸ்கர் விருது வாங்கிய நியூசிலாந்தை சேர்ந்த ஹாலிவுட் இயக்குனர் பீட்டர் ஜாக்சன் தனக்கு சொந்தமான விமானத்தை மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.