கொரோனா கோரத்தாண்டவம்: இங்கிலாந்து, போர்ச்சுகலில் மீண்டும் லாக்டவுன் அமல்- கட்டுப்பாடுகள் அறிவிப்பு
லண்டன்\லிஸ்பன்: கொரோனா பரவல் அதிகரித்ததால் இங்கிலாந்தில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 2-ந் தேதி கடும் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அறிவித்துள்ளார். இதேபோல் போர்ச்சுகலிலும் கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
உலக நாடுகளில் கொரோனாவால் மொத்தம் 4,62,61,807 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 11,98,439 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,34,24,094.
கொரோனாவின் தாக்கம் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் அதிகரித்துவிட்டது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சனிக்கிழமையன்று இங்கிலாந்தில் மொத்தம் 21,915 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனால் இங்கிலாந்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,11,660 ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் கொரோனா மரணங்களும் அதிகரிக்க தொடங்கிவிட்டன. சனிக்கிழமை ஒரே நாளில் 326 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இங்கிலாந்தில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 46,555.
இந்த நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இங்கிலாந்தில் மீண்டும் 4 வார லாக்டவுன் அமல்படுத்தப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்ஸன் சனிக்கிழமையன்று அறிவித்தார். இங்கிலாந்தில் 2வது முறையாக லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறது. அத்தியாவசிய தேவையில்லாத அனைத்து வர்த்தக நிறுவனங்களும் வரும் வியாழக்கிழமை முதல் 4 வாரங்களுக்கு மூடப்படும் என்றும் போரிஸ் ஜான்ஸன் அறிவித்திருக்கிறார்.
இப்புதிய கட்டுப்பாடுகளின் படி, பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே நடமாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பப்ஸ், மதுபான கூடங்கள், உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். கட்டுமானப் பணிகள், உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்புதிய லாக்டவுன் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமையன்று போரிஸ் ஜான்சன் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார்.
இதேபோல் போர்ச்சுகல் நாட்டிலும் லாக்டவுன் அமல்படுத்தப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 4-ந் தேதி முதல் லாக்டவுன் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேவர வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்விடுக்கப்பட்டுள்ளது.