டேவிட் கேமரூன் நாளை ராஜினாமா... இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் தெரேசா மே!
லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் வெளியேற வேண்டும் என மக்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து தற்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் புதன்கிழமை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது குறித்து பிரிட்டனில் வியாழக்கிழமை பொதுவாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பு முடிவில் 51.9 சதவிகிதம் மக்கள் வெளியேறலாம் என்றும், 48.1 சதவிகிதத்தினர் வெளியேற வேண்டாம் என்றும் வாக்களித்துள்ளனர். பெரும்பான்மையோர் கருத்தின் அடிப்படையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுகிறது.
இதனால் பிரிட்டன், ஐரோப்பிய யூனியனில் இணைந்திருக்க வேண்டும் என்று பிரசாரம் செய்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலக போவதாக அறிவித்தார்.
இதன்படி நாளை தான் பதவி விலகப் போவதாக டேவிட் கேமரூன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து ஆண்ட்ரியா லீட்சும் விலகியதை அடுத்து, கன்சர்வேடிவ் சார்பாக தெரேசா மே இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.