வெளியிடப்பட்ட முதல் வாரத்திலேயே 80,000 பிரதிகள் விற்பனையான கேர்ள் ஆன்லைன்
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த 24 வயது பெண் எழுதிய முதல் புத்தகம் வெளியிடப்பட்ட ஒரு வாரத்தில் 80 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகியுள்ளது.
இங்கிலாந்தின் வில்ட்ஷையரைச் சேர்ந்தவர் ஜோ சுக்(24) என்ற ஜோயல்லா. அவர் யூடியூப்பில் பேஷன் மற்றும் அழகு பற்றி வீடியோக்கள் போஸ்ட் செய்து தனது வேலையை துவங்கினார். அவர் 2009ம் ஆண்டில் இருந்து வீலாக்ஸ் அதாவது வீடியோ பிளாக்குகளை போஸ்ட் செய்து வருகிறார். யூடியூப்பில் அவருக்கு 60 லட்சம் பாலோயர்களும், ட்விட்டரில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோயர்களும் உள்ளனர்.
இந்நிலையில் அவர் கேர்ள் ஆன்லைன் என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த புத்தகம் வெளியான முதல்வாரத்தில் 80 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகியுள்ளது. பிரபல எழுத்தாளர்களான ஹாரி பாட்டர் சீரிஸ் எழுதிய ஜே.கே. ரவ்லிங், டாவின்சி கோட் எழுதிய டான் பிரவுனின் முதல் புத்தகங்கள் ஜோயல்லாவின் புத்தகத்தை விட குறைவான அளவிலேயே முதல் வாரத்தில் விற்பனையாகியுள்ளது.
இ.எல்.ஜேம்ஸ் எழுதிய ஃபிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே புத்தகம் கூட முதல் வாரத்தில் இத்தனை பிரதிகள் விற்பனையாகவில்லை.
இது குறித்து ஜோயல்லா கூறுகையில்,
என் புத்தகத்தை வாங்கிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பலருக்கு என் புத்தகம் பிடித்துள்ளதில் மகிழ்ச்சி. இந்த ஆண்டு மகிழ்ச்சிகரமானதாக அமைந்துள்ளது என்றார்.