முந்தைய ஃபிளைட்டில் இடமில்லாததால் மாயமான விமானத்தில் சென்ற தந்தை, மகள்
ஜகர்தா: முதலில் சென்ற விமானத்தில் இடம் இல்லாததால் மாயமான ஏர் ஏசியா விமானத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் தனது 2 வயது மகளுடன் பயணம் செய்துள்ளார்.
இந்தோனேசியாவில் இருந்து 162 பேருடன் சிங்கப்பூர் சென்ற ஏர் ஏசியா விமானம் க்யூஇசட்8501 மாயமாகியுள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தோனேசியர்கள், ஒரேயொருவர் மட்டும் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இங்கிலாந்தில் உள்ள யார்க்ஷயரைச் சேர்ந்தவர் சோய் சி மான். எச்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் என்ஜினியரிங் படித்த அவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.
குடும்பம் சிங்கப்பூரில் இருந்தாலும் அவர் இந்தோனேசியாவில் உள்ள ஆல்ஸ்டாம் பவர் என்ற நிறுவனத்தின் பொது மேலாளராக உள்ளார். இந்நிலையில் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இந்தோனேசியா வந்தனர். அவர்களுடன் மானும் சிங்கப்பூர் கிளம்பினார். ஆனால் நான்கு பேருக்கும் ஒரே விமானத்தில் டிக்கெட் கிடைக்கவில்லை. அதனால் முந்தைய விமானத்தில் மானின் மனைவி மற்றும் மகன் கிளம்பிச் சென்றனர்.
அதன் பிறகு கிளம்பிய ஏர் ஏசியா விமானத்தில் மானும், அவரது இரண்டு வயது மகள் ஜோவும் கிளம்பினர். ஆனால் அந்த விமானம் மாயமாகியுள்ளது. மான் இந்த ஆண்டு தான் ஜகார்தாவில் உள்ள ஆல்ஸ்டாம் பவர் நிறுவனத்தில் சேர்ந்தார்.
மானின் பெற்றோர் ஹாங்காங்கில் இருந்து இங்கிலாந்தில் குடியேறியவர்கள். மானின் சகோதரர் மற்றும் சகோதரி ஆகியோர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார்கள்.