போதையால் விபரீதம்... குறும்பு செய்த தம்பி குத்திக்கொலை - அண்ணன் தூக்கிட்டு தற்கொலை
டப்ளின்: போதைப் பழக்கவழக்கங்களுக்கு அடிமையான வாலிபர் ஒருவர், தனது 9 வயது தம்பியைக் குத்திக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அயர்லாந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அயர்லாந்தின் ஸ்லிகோ மாவட்டத்தில் உள்ள பனாடா பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்தவன் ஷேனுக்கு 20 வயதாகிறது, இளையவன் பிராண்டன் ஸ்கெஃபிங்ட்டனுக்கு 9 வயதாகிறது.
ஷேன் கொக்கைன், கஞ்சா போன்ற போதைப் பழக்கத்துக்கு அடிமையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிறன்று மாலை தனது மூத்தமகன் பொறுப்பில் இளைய மகனை விட்டுவிட்டு பெற்றோர் வெளியில் சென்றுள்ளனர்.
இரவு 8 மணியளவில் அவர்கள், திறந்திருந்த வீட்டிற்குள் உடல் முழுக்க கத்திக் குத்து மற்றும் வெட்டுக் காயங்களுடன் சிறுவன் பிராண்டன் ஸ்கெஃபிங்ட்டன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அவசர மருத்துவ உதவிக்கு போன் செய்த பெற்றோர், தங்களது மூத்த மகனைத் தேடியுள்ளனர். அப்போது ஒரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஷேன் பிணமாக மீட்கப்பட்டான்.
இதற்கிடையே ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த டாக்டர்கள் பிராண்டனுக்கு அவசர சிகிச்சை அளித்து, சில்கோ மாவட்ட ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், அங்கு அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களுக்குள் அவனது உயிர் பிரிந்தது.
பிராண்டன் மிகவும் குறும்புக்கார சிறுவன் எனக் கூறும் அக்கம்பக்கத்தார், அவனது குறும்புத்தனங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தம்பியைக் கொலை செய்து விட்டு, பின் தவறை உணர்ந்து ஷேனும் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.