இந்தியாவில் இருக்கும் சகோதரியை தேடி அலையும் அமீரக சகோதரர்கள்
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த சகோதரர்கள் 2 பேர் இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றாந்தாய்க்கு பிறந்த சகோதரியை தேடிக் கொண்டிருக்கின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர் இப்ராஹிம் அப்துல்லா. அவர் ஷார்ஜாவில் உள்ள கோர்பக்கான் பகுதியில் வசித்து வருகிறார். அவரது தந்தை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இறப்பதற்கு முன்பு அவர் தனக்கு இந்தியாவில் ஒரு மகள் இருப்பதாகவும், அவரை கண்டுபிடிக்க முடியாமல் போனதாகவும் அப்துல்லாவிடம் தெரிவித்துள்ளார்.
தந்தையாக தான் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய முடியாமல் போனதே என்று வருத்தப்பட்டுள்ளார் அப்துல்லாவின் தந்தை. அப்துல்லாவின் தந்தை இந்தியா சென்றபோது இந்திய பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். அவர் அமீரகம் திரும்பிய பிறகு தனது இந்திய மனைவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்றும், அதற்கு பாத்திமா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிய வந்தது. இதையடுத்து அவர் பல முறை இந்தியா வந்தும் மனைவியையும், மகளையும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் மகளை பார்க்காமலேயே இறந்துவிட்டார்.
இந்நிலையில் 40 வயது பெண் ஒருவர் தனது தந்தையை தேடும் செய்தி அப்துல்லாவுக்கும், அவரது சகோதரர் அகமதுக்கும் தெரிய வந்தது. அகமது லண்டனில் வசிக்கிறார். இதையடுத்து அவர்கள் மாற்றாந்தாய்க்கு பிறந்த இந்திய சகோதரியை தேடி வருகிறார்கள்.
இது குறித்து அப்துல்லா கூறுகையில்,
எனது தந்தை தனது மகளை நினைத்து பல இரவுகள் தூங்கவில்லை. நானும், எனது சகோதரும் எங்கள் சகோதரியை தேடி இந்தியாவுக்கு பலமுறை சென்றும் பலனில்லை. இருப்பினும் அவரை தொடர்ந்து தேடி வருகிறோம். எனது சகோதரிகளும் இந்திய சகோதரியை பார்க்க ஆவலாக உள்ளனர் என்றார்.