பிரஸ்ஸல்ஸில் தவித்த 242 இந்தியர்கள் மீட்கப்பட்டு டெல்லி வருகை.. உறவினர்கள் மகிழ்ச்சி
பிரஸ்ஸல்ஸ்: குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்த பிரஸ்ஸல்ஸில் சிக்கித் தவித்த 242 இந்தியர்களை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது விமானம் மூலம் டெல்லி அழைத்து வந்துள்ளது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டுகள் வெடித்ததில் 34 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தையடுத்து பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் மூடப்பட்டது.
இதனால் பிரஸ்ஸல்ஸில் சிக்கித் தவித்த இந்தியர்களை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பேருந்துகள் மூலம் புதன்கிழமை இரவு ஆம்ஸ்டர்டாமிற்கு அழைத்துச் சென்றது. அங்கு அவர்கள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் பிரஸ்ஸல்ஸில் இருந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் வியாழக்கிழமை ஆம்ஸ்டர்டாம் சென்று அங்கிருந்த 28 சிப்ந்திகள் உள்பட 242 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு டெல்லிக்கு கிளம்பியது.
அந்த விமானம் இன்று காலை 5.30 மணிக்கு டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. மற்றொரு விமானம் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மும்பைக்கு கிளம்ப வேண்டியது. ஆனால் அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அது ரத்து செய்யப்பட்டது.
கைது:
பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் குறித்து போலீசார் 6 பேரை சந்தேகத்தின் பேரில் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.