இந்திய எல்லைக்குள் பறந்த பாகிஸ்தானின் 2 குட்டி விமானங்கள்.. பஞ்சாப் எல்லையில் பரபரப்பு
Recommended Video
அமிர்தசரஸ்: பாகிஸ்தானின் இரண்டு ஆளில்லா உயர் ரக குட்டி விமானங்கள் (டிரோன்கள்) பஞ்சாப் எல்லையில் பறந்து சென்றதை கண்ட எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியினை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்தியா பாகிஸ்தான் இடையே குஜராத் தொடங்கி, ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் என பலநீண்ட எல்லை உள்ளது. இதில் பஞ்சாப் மாநிலம் பெரோஷ்பூர் அருகே ஹூசைனிவாலா எல்லைப்பகுதியில் இன்று பாகிஸ்தானின் இரண்டு ஆளில்லா விமானங்கள் பறந்து வந்ததை எல்லைப் பாதுகாப்பு படையினர் கண்டனர்.
நான்கு முறை வந்த இந்த உளவு விமானங்கள் இந்திய எல்லைக்குள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தாண்டிவந்துவிட்டு, பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் சப்தமே இல்லாமல் வேகமாக திரும்பிச் சென்றுள்ளது.
இந்திய எல்லைக்குள் இரண்டு ஆளில்லா உயர் ரக குட்டி விமானங்கள் பறந்த தகவலை கேட்டு உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து எல்லைப் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியினை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பூஜ்ய எல்லைக்கோடு என்று அழைக்கப்படும் எல்லையை ஒட்டி நெருக்கமாக வசிக்கும் மக்களிடம் ஏதேனும் சந்தேகத்திற்கான விஷயங்களை கண்டால், உடனடியாக போலீஸ் அல்லது எல்லைப்பாதுகாப்பு படையினரிடம் தகவல் தெரிவிக்குமாறு எல்லைப்பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தி உள்ளனர்.