சீனாவில் மீண்டும் பரவுகிறது ‘பிளேக்’... நோய்த் தாக்குதலுக்குள்ளான யூமென் நகருக்கு சீல்!
பெய்ஜிங்: சீனாவில் பிளேக் என்னும் உயிர் கொல்லி நோய் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதால், நோய்த்தாக்குதலுக்கு ஆளாகி சுமார் 150 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் யூமென் நகருக்கு சீல வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்பு பிளேக் என்ற உயிர்க் கொல்லி நோய் உலகையே ஆட்டிப்படைத்தது. எலிகள் மூலம் பரவும் இந்த நோய்க்கு பல்லாயிரம் மக்கள் பலியானார்கள்.
விஞ்ஞானிகளின் கடும் உழைப்பிற்குப் பின்னர் சக்தி வாய்ந்த மருந்து கண்டுபிடிக்கப் பட்டு பிளேக் நோய் அழிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது அந்த நோய் மீண்டும் சீனாவில் பரவத் தொடங்கியுள்ளது.
பிளேக்...
வடமேற்கு சீனாவின் கான்சூ மாகாணத்தில் யூமென் என்ற நகரில் கொடிய பிளேக் நோய் மக்களை தாக்கியுள்ளது. இந்த நோய்க்கு கடந்த வாரம் ஒருவர் உயிரிழந்தார்.
சிகிச்சை...
மேலும், 151 பேர் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். எனவே அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தடை...
பிளேக் நோய் பரவியுள்ள யூமென் நகரத்தில் சுமார் 30 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இது ஒரு தொற்று நோய் என்பதால் இந்த நகரத்து மக்கள் வெளியூர்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று வேறு பகுதிகளில் இருந்தும் இந்நகரத்துக்கு மக்கள் வர தடை விதிக்கப் பட்டுள்ளது.
மாற்றுப் பாதை...
யூமென் நகரின் எல்லைகள் அடைக்கப்பட்டுள்ளன. முக்கியமான பிரதான சாலைகளையும் போலீசார் அடைத்து வைத்துள்ளனர். எனவே, யூமென் நகரைத் தாண்டி செல்பவர்கள் வேறு மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சீல்...
மொத்தத்தில் யூமென் நகரம் முற்றிலும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இத்தகவலால் சீனாவின் மற்றப் பகுதி மக்களும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.