நீங்கள் யார் என்பதை கண்டறியுங்கள்.. ஒபாமா மகள்களுக்கு முன்னாள் அதிபர் புஷ் மகள்கள் உருக்கமான கடிதம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவிக்காலம் முடிவடைய உள்ள ஒபாமாவின் மகள்கள் சஷா மற்றும் மலியா ஆகியோருக்கு, முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ.புஷ் இரட்டையர் மகள்கள் ஒரு திறந்த கடிதம் எழுதியுள்ளனர்.
அதிபர் முதல் குடிமகன் என்று அழைக்கப்படுவதை போல அதிபரின் மகள்கள் முதல் மகள்கள் என்று அழைக்கப்படுவது வழக்கம். இப்போது புஷ் மகள்களை போல, ஒபாமா மகள்களும், முன்னாள்-முதல் மகள்கள் அந்தஸ்துக்கு செல்ல உள்ள நிலையில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.
நீங்கள் சிறுமிகளாக இருந்தபோது முதல் இப்போது இளம் பெண்களாக வளர்ந்துள்ள வரையிலான உங்களது வளர்ச்சியை நாங்கள் பார்த்துள்ளோம். இப்போது முன்னாள் முதல்-மகள்கள் அந்தஸ்துக்கு வர உள்ளீர்கள். இதை முன்பு நீங்கள் அனுபவித்திருக்க மாட்டீர்கள். எதிர்காலத்தை நோக்கி நீங்கள் இன்னும் நிறைய பார்வையை செலுத்த வேண்டியுள்ளது.
புகழ்பெற்ற உங்கள் பெற்றோரின் நிழலை தவிர்த்து, உங்கள் வாழ்க்கை கதையை நீங்கள் சொந்தமாக எழுதப்போகிறீர்கள். அதேநேரம், கடந்த 8 வருடமாக உங்கள் வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை நீங்கள் முன்நகர்த்தி செல்ல வேண்டும்.
கடந்த 8 வருடங்களில் நீங்கள் நிறைய செய்திருக்கலாம். நிறைய பார்த்திருக்கலாம்.
வெள்ளை மாளிகை ஊழியர்களுடன் தொடர்ந்து நீங்கள் தொடர்பில் இருங்கள். உங்களை பாதுகாக்கவும், சொந்த வீட்டில் இருப்பதை போல உணரச் செய்ததும் அவர்கள்தான். உங்களது இளம் தோள்களில் இனிமேல் நீங்கள் உலகத்தின் பாரத்தை சுமக்க தேவை இருக்காது. உங்களுக்கு விருப்பமானதை நீங்கள் இனி சுதந்திரமாக செய்யலாம். நீங்கள் யார் என்பதை கண்டுபிடியுங்கள். தவறுகளை செய்யுங்கள். திருத்துங்கள். கல்லூரி வாழ்க்கையை அனுபவியுங்கள். உங்கள் பெற்றோர்தான் உங்களுக்கு இந்த உலகத்தை தந்தனர். நீங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல அவர்களே ஆணி வேர். இவ்வாறு அந்த கடிதம் முடிகிறது.