முஸ்லிம்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவாங்க.. அணு ஆயுத போர் வரும்.. இம்ரான் கான் வார்னிங்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் முஸ்லிம்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள் என்றும், தெற்காசியாவில் அகதிகள் நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்றும் இரு நாடுகளுக்கும் இடையே அணு ஆயுத மோதலைத் தூண்டக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.
இந்திய அரசு அண்மையில் புதிய குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கிய இந்த போராட்டங்கள் தற்போது நாடு முழுவதும் பரவி உள்ளது.
டெல்லியில் கல்லூரியில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பல கல்லூரிகளுக்கு பரவி உள்ளது. குடியுரிமை சட்டத்துக்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவதால் பதற்றமான சூழ்நிலை பல இடங்களில் காணப்படுகிறது.
நெருக்கடி உருவாகும்
இந்நிலையில் இந்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் முன்பு ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து இப்போது குடியுரிமை சட்டம் மேலும் பல நெருக்கடிகளை உருவாக்கும்.
பாகிஸ்தான் வர
இதன் காரணமாக இந்திய முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேறி பாகிஸ்தானுக்கு வர நேரிடலாம். பாகிஸ்தானால் அதைச் சமாளிக்க இயலாது. இது வெறும் அகதிகள் பிரச்னையாக மட்டுமல்லாமல் இரண்டு அணுஆயுத நாடுகளையும் போர் முனைக்கு கொண்டு செல்லும்.
புதிய சட்டம்
இந்திய அரசு, காஷ்மீரை ஆக்கிரமித்து உள்ளதோடு அஸ்ஸாமில் முஸ்லிம்கள் குடியுரிமையையும் பறித்தது இருக்கிறது. தற்போது குடியுரிமை சட்டம் என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது'' இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தலையிடக்கூடாது
இதற்குப் பதிலளித்த இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில் , ``பாகிஸ்தான் பிரதமரின் அனைத்துக் கருத்துக்கும் இந்தியா பதிலளிக்க வேண்டிய தேவையில்லை. இம்ரான் கான், இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாமல் அவர்கள் நாட்டின் சிறுபான்மையினர் நிலைமையில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
துன்புறுத்தியது
பாகிஸ்தானின் நடவடிக்கைகள் அண்டை நாட்டுகளுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 72 ஆண்டுகளில், பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு அதன் சிறுபான்மையினர் அனைவரையும் திட்டமிட்டு துன்புறுத்தியுள்ளது, அவர்களில் பெரும்பாலோர் இந்தியாவுக்கு தப்பிச் செல்லுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். என்றும் ரவீஷ் குமார் விமர்சித்தார்.