கலிபோர்னியாவை கலங்கடிக்கும் காட்டுத்தீ... 9 பேர் பலி, ஆபத்தில் ஆயிரக்கணக்கானோர்!
Recommended Video
கலிபோர்னியா : கலிபோர்னியாவில் மீண்டும் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் அச்சுறுத்தும் தீப்பிழம்பில் மாட்டிக்கொண்டுள்ளன.
சான்டா அனா சூறாவளிக் காற்றின் காரணமாக காட்டுப் பகுதியில் இருந்த சறுகுகள் உரசி தீப்பிடித்துள்ளது. கலிபோர்னியாவில் வேகமாக பரவி வரும் இந்த காட்டுத் தீக்கு இது வரை 9 பேர் பலியாகியுள்ளனர்.
மலைகளை இரையாக்கிக் கொண்ட காட்டுத் தீ குடியிருப்புப் பகுதிகளுக்கும் பரவியதால் ஏறத்தாழ 10 ஆயிரம் பேர் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பல்வேறு முயற்சிகளை எடுத்தும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய காட்டுத் தீயானது ஊஸ்லே தீ என்று அழைக்கப்படுகிறது. சுமார் 22 சதுர மைல்களுக்கு இந்த தீயானது பரவியுள்ளது. காட்டுப் பகுதியில் இருந்து எட்டு வழி நெடுஞ்சாலை 101ஐ கடந்து சான்டா மோனிகா மலைகள் வழியாக ஊடுருவி போஷ் மலிபுவில் வீடு மற்றும் கார்களை சூறையாடியுள்ளது.
வடக்குப் பகுதியில் காட்டுத்தீயின் கோரத்தாண்டவம் பற்றி வெளியாகும் செய்திகள் இன்னும் மோசமாக இருக்கிறது. சுமார் 9 பேர் காட்டுத்தீக்கு பலியாகி இருக்கலாம் என்றும் குடியிருப்புகளுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீயில் கருகிவிட்டதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கலிபோர்னியா மாநிலத் தலைநகரான சேக்ராமென்டோவில் இருந்து 90 மைல்கள் தூரத்தில் இருக்கும் மவுண்டயின் டவுன் ஆஃப் பாரடைஸ் பெருத்த சேதத்தை கண்டுள்ளது. பாரடைஸ் முழுவதும் புகைசூழ்ந்திருக்கிறது, இந்த பேரழிவால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் நின்ற கார்கள் தீயில் கருகிய எலும்புக்கூடுகளாக நிற்கின்றன. 23.4 மில்லியன் கலிபோர்னிய மக்களுக்கு சிகப்புக் கொடி எச்சரிக்கையானது கொடுக்கப்பட்டுள்ளது.
தீயானது சிகோ சிட்டியை தாக்கக்கூடும் என்பதால் இந்த நகரத்தில் இருக்கும் மக்கள் வெளியேற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சிகோ நகரம் பாரடைஸில் இருந்து 90 ஆயிரம் மைல்கள் தூரத்தில் இருக்கிறது. சூறாவளித் தீயானது இதுவரை மொத்தமாக 110 சதுர மைல்களை கடந்துள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அந்த மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே முன்னெச்சரிக்கையாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம் புக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.