தினமும் பள்ளிக்கு செல்லும் பூனை: ஐடி கார்டு அளித்த பள்ளி நிர்வாகம்
கலிபோர்னியா: அமெரிக்காவில் பூபா என்ற பூனை தனது உரிமையாளர்களின் குழந்தைகளுடன் சேர்ந்து தினமும் பள்ளிக்கு சென்று வகுப்பறையில் பாடத்தை கவனிக்கிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஜோஸ் நகரைச் சேர்ந்த பெண் ஆம்பர் மரியந்தால். அவர் கடந்த 2009ம் ஆண்டு பூபா என்ற பூனையை தத்தெடுத்துள்ளார். அவரது மகன்கள் மேத்யூ, மார்க் ஆகியோர் அந்த பகுதியில் உள்ள லேலேண்ட் உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பூபா வீட்டில் இருக்காமல் தினமும் பள்ளிக்கு சென்று வகுப்பறைகளில் அமர்ந்து பாடத்தை கவனிக்கிறது. பள்ளி திறக்கும் முன்பு முதல் ஆளாக அங்கு சென்று வாசலில் காத்துக் கொண்டிருக்கிறது பூபா. தினமும் பள்ளிக்கு வரும் பூபாவை மாணவர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.
பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அடையாள அட்டைக்காக புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது பள்ளி வளாகத்தில் சுற்றிக் கொண்டிருந்த பூபாவை தான் முதலில் புகைப்படம் எடுத்து அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
ஆம்பர் வளர்க்கும் பிற பூனைகள் வீட்டோடு இருக்கையில் பூபா மட்டும் பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் பழகுவது அப்பகுதி மக்களை வியக்க வைத்துள்ளது.