அமெரிக்கா: பெண்ணை 15 ஆண்டுகளாக செக்ஸ் அடிமையாக வைத்திருந்த நபர்
கலிபோர்னியா: அமெரிக்காவில் தனது உறவுக்கார பெண்ணை 15 ஆண்டுகளாக வீட்டுக்கு பின்னால் இருக்கும் கொட்டகையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த நபருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர் ரவூல் ஓசுவா(52). அவர் தனது உறவுக்கார பெண்ணுக்கு 12 வயது இருக்கும்போதில் இருந்து அவரை தனது வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். தனது வீட்டுக்கு பின்னால் ஒரு கொட்டகையை கட்டி அப்பெண்ணை அங்கு வைத்து பலாத்காரம் செய்ததுடன் அவரை கட்டாயப்படுத்தி அங்கேயே தங்க வைத்துள்ளார். அவர் இப்படி 15 ஆண்டுகளாக அந்த பெண்ணை அடைத்து வைத்து பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இது ரவூலின் குடும்பத்தாருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் இது குறித்து போலீசில் புகார் செய்யவில்லை. இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த பெண்ணுக்கு 27 வயது இருக்கையில் அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல குடும்பத்தார் உதவி செய்தனர். அப்பெண்ணும் தப்பிச் சென்று போலீசாரிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை தெரிவித்தார்
இதையடுத்து போலீசார் ரவூல் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.