பக்கத்து சீட் பெண்ணிடம் பாலியல் சில்மிஷம்.. பாதிரியாருக்கு 6 மாத சிறை, 6 மாத வீட்டுக் காவல்
கலிபோர்னியா: விமானப் பயணத்தின் போது பக்கத்து இருக்கையில் உறங்கிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தந்த கலிபோர்னியா பாதிரியாருக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும், அதனைத் தொடர்ந்து ஆறு மாத வீட்டுக்காவலும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், பிலெடெல்பியாவிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் சென்ற விமானத்தில் பயணம் செய்தார் மார்செலோ டி ஜெசுமாரியா (46) என்ற பாதிரியார். அப்போது அவரது பக்கத்து இருக்கையில் பெண் பயணி ஒருவர் பயணம் செய்தார்.
இரவு நேரப் பயணத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மார்செலோ, அருகில் இருந்த பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு தந்துள்ளார். அவரது மார்பகம், பின்பக்கம், அந்தரங்கப் பகுதிகளில் தொட்டுத் தடவியுள்ளார். இது தொடர்பாக விமான ஊழியர்களிடமும், அதனைத் தொடர்ந்து போலீசிலும் அப்பெண் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் மார்செலோவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், ‘வேண்டுமென்றே தான் பெண் பயணியின் அருகில் தனது இருக்கையை மாற்றிக் கொண்டதாகவும், ஆனால் அப்பெண் கூறுவது போல் தான் பாலியல் தொந்தரவு எதுவும் தரவில்லை' என்றும் தெரிவித்தார்.
ஆனால், போலீசாரின் விசாரணையில் மார்செலோ, புகார் கூறிய பெண்ணை தனது மனைவி எனக் கூறி இருக்கையையை மாற்றியது தெரிய வந்தது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மார்செலோ, கலிபோர்னியாவில் உள்ள சான் பெர்னார்டினோ டயோசிஸில் இருந்து நீக்கப்பட்டார். மார்செலோவின் செயலானது சட்டத்திற்கு புறம்பானது பாவமானது என டயோசிஸ் தெரிவித்துள்ளது.
இந்த விசாரணையின் முடிவில், மார்செலோ மீதான குற்றம் நிரூபிக்கப் பட்டதை அடுத்து, அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும், அதைத் தொடர்ந்து ஆறு மாதம் வீட்டுக் காவலும் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.