இங்கிலாந்து ராணியின் ஹெலிகாப்டரை இயக்க பைலட் தேவை: மாதச்சம்பளம் ரூ. 6.5 லட்சம்!
லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் ஹெலிகாப்டரை இயக்க முன் அனுபவமுள்ள விமானி தேவை என அரச குடும்பத்து இணையதளத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. தேவு செய்யப்படும் விமானிக்கு மாதச் சம்பளமாக இந்திய மதிப்பில் ரூ. 6.5 லட்சம் வழங்கப் படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அரச குடும்பத்தில் முறையான விமானப் பயிற்சி பெற்றவர்கள் பலர் உள்ளனர். இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மகன்கள் வில்லியம், ஹாரி ஆகியோரும் முறைப்படி விமானப் பயிற்சி பெற்றவர்கள் தான். இளவரசர் சார்லஸ் இங்கிலாந்து விமானப் படையில் பணியாற்றியுள்ளார். இளவரசர் வில்லியம் இந்த மாதம் முதல் மருத்துவ விமானத்தின் விமானியாக பணியாற்ற உள்ளார்.
இந்நிலையில், ராணியின் ஹெலிகாப்டருக்கு தலைமை விமானி தேவை என விளம்பரம் வெளியாகியுள்ளது.
தலைமை விமானி தேவை...
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பயன்பாட்டிற்கென இரண்டு ஹெலிகாப்டர்கள் உள்ளன. அவற்றிற்கு தலைமை விமானி தேவை என அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியத் தகுதி...
இந்த பணிக்கான முக்கிய தகுதிகளில் ஒன்று, இதற்கு முன்னர் விவிஐபி எனும் மிக மிக முக்கிய நபர்களுக்கு விமானியாக இருந்த முன் அனுபவம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்னபிற தகுதிகள்...
முன் யோசனை, உடனடி முடிவெடுக்கும் அறிவுத்திறன், அவசர நிலைகளை எதிர்கொண்டு பிரச்சினைகளைத் தீர்க்கும் சமயோஜிதம் ஆகிய பிற தகுதிகளைக் கொண்ட நபர்கள், தங்களது விமானி உரிமச் சான்றிதழுடன் வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இளவரசரை விட அதிகம்...
தேர்வு செய்யப்படும் விமானிக்கு ஆண்டுக்கு 78,500 பவுண்ட் சம்பளம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 7,735,060 ஆகும். இளவரசர் வில்லியமின் சம்பளத்தோடு ஒப்பிடுகையில் இது இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.