அமெரிக்க அதிபர் தேர்தல்... ட்ரம்புக்கு எதிராக டென்மார்க்கில் பிரச்சாரம்?
கோபன்ஹகென்(டென்மார்க்): அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப்-க்கு எதிரான நூதன பிரச்சாரத்தை டென்மார்க் நாட்டின் அரசியல் கட்சி செய்து வருகிறது.
டேனிஷ் சோசலிஸ்ட் மக்கள் கட்சியின் சார்பில் ஏராளமான பஸ்களில் இந்த பிரச்சாரம் செய்யப்படுகிறது. பெரிய எழுத்தில், 'வெளி நாட்டில் வாழும் அமெரிக்கர்களே வாக்களியுங்கள்' என்ற வாசகம் பஸ்ஸின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளது.
பஸ்ஸின் சக்கரத்தில் டொனால்ட் ட்ரம்பின் கண்கள் வரும் விதமாக அவருடைய முகமும் வரையப்பட்டுள்ளது. பஸ் செல்லும் போது, ட்ரம்ப் கண்களை உருட்டுவது போல் இது தெரிகிறது.
டென்மார்க்கில் 8714 அமெரிக்கர்கள் உள்ளனர். இவர்கள் தபால் மூலம் அல்லது ஆன்லைனில் வாக்களிக்க முடியும்.
'ட்ரம்பின் அரசியல் கண்ணோட்டம் எங்களுடைய நிலைப்பாட்டிற்கு மிகவும் தூரமானது. அவரை அமெரிக்க அதிபராக நினைத்துப் பார்ப்பது கூட பயமாக இருக்கிறது. இங்கு இருக்கும் அமெரிக்கர்களை எங்களால் வலியுறுத்தி அவருக்கு எதிராக வாக்களிக்க வைக்க முடிந்தால், சிறிய தாக்கத்தையாவது ஏற்படுத்தும்.
அந்த நம்பிக்கையில் இந்த பிரச்சாரத்தை செய்கிறோம்,' என்று டேனிஷ் சோஷியலிஸ்ட் மக்கள் கட்சியின் தலைவர் பியா ஓல்ஸன் டைர் கூறியுள்ளார்.
சின் என் என் தொலைக்காட்சி உட்பட ஊடகங்களின் உதவியால், டென்மார்க்கின் இந்த பஸ் பிரச்சாரம் அமெரிக்காவிலும் வாக்காளர்களிடம் பரவலாக சென்றடைந்துள்ளது.
தம்மாத்துண்டு நாடான டென்மார்க் கட்சிக்காரங்க பிரச்சாரம் செய்யும் அளவுக்கு அமெரிக்க அதிபர் தேர்தல் ஆகிப்போச்சே? என கமெண்ட் அடிக்கிறார்கள் (அமெரிக்க) உள்ளூர்வாசிகள்!